COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, May 29, 2010

கடற்கரையில் வாழ்க்கைப் பயணம்

நண்டுகளைச் சுற்றி
கவனமாகப் போகிறேன்....
மணல்வீடுகளுக்கு ஒரு புன்சிரிப்புடன்
என் அன்பு!
கிடக்கும் உடையாத கிளிஞ்சல்களை
பொறுக்கி என்கூடையில் சுமக்கிறேன்....
தாய்நாட்டில் கிடைக்காத கட்டற்ற பெண்விடுதலையோடு
சிற்றுடையில் சைக்கிளில் கடற்கரையில்
கடல்காதலோடு சைக்கிள் பயணம்.

குழந்தைகளின் சிற்றடிச் சுவடுகளைக்
கனிவுடன் கடக்கிறேன்...
நுரையும் பந்துமாய்
நாய்களோடு குழந்தைகளின் ஆட்டம்,
பிரபஞ்சத்தின் பிரக்ஞை இல்லா
நம்பிக்கை அவர்களுக்கு கடல் மேல்!

'ஹை பாப், நான் உன்னை காதலிக்கிறேன், ஸூ'
'நான் தான் கடவுள்'
பிரகடனங்களின் மேல்
சிறு கோடிட்டுச் செல்கிறது
என் சைக்கிள்.

காலை மலர்வதற்குள்,
பிரகடனங்களோடு
சைக்கிள் டயர் சுவடுகளையும்,
குழந்தைகளின் காலடிச் சுவடுகளையும்
நண்டுகளின் சுவடுகளையும்
எல்லாவற்றையும் அழிக்கும் கடல்.