COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Monday, March 23, 2009

போக்குக் காட்டும் பிம்பங்கள்

என் முகமூடியை கவனமாக உடுத்தி,
நடையை கவனமாக
என் தோழரைப் போல்,
என் பேச்சும் சிரிப்பும் கூட
என் தோழர்களைப் போலவே.

"எவ்வளவு முற்போக்குக் கொண்டவர்கள்
என் தோழர்படை என்று
உங்களுக்குத் தெரியுமா?
எங்களைச் சாராததால் நீங்கள்
அனைவரும் பிற்போக்குவாதிகள்.
உங்களை எள்ளி நகையாடுவோம்!
உங்கள் அனைவரையும் வீழ்த்தும்
எங்கள் போராட்டம்.
எங்களைப் போல் உடுத்துங்கள்,
எங்களைப் போல் நடவுங்கள்!
எங்களில் ஒருவருக்கே
உங்களை ஆளும் மகுடம்".

கருத்துகளைப் பேசிப் பழகினேன்
என் வீட்டுக் கண்ணாடியில்.
சொல்லிக் கொண்டேன் என் பிம்பத்திடம்
'நான் எல்லோரையும் முன்னேற்ற வந்திருக்கிறேன்'.

Friday, March 20, 2009

காதல் என்பது...

கல்லூரி விடுதியில், தோழிகள் எல்லாரும் "ஏய், வரியா இல்லியா? லேட் பண்ணாத" என்று மிரட்டிட்டிருந்தாங்க. டேஸ்காலர் ஆக நான் தினம் கல்லூரி போனாலும், அம்மாவிடம் இது ஃபைனல் இயர், நேர்முகத் தேர்வு இருப்பதால் நான் மஹாவுடைய அறையில் ரெண்டு நாள் தங்கப் போகிறேன்னு சொல்லியிருந்தேன். இன்றைக்கு வீட்டுக்கு வருவேன்னும் சொல்லியிருந்தேன். தோழிங்க எல்லாரும் இன்றைக்கு மலைக்கோட்டை போகலாம்னு திடீர் ப்ளான். தஞ்சையில் பொறண்டு வளர்ந்தவள், எனக்குத் தெரியாத மலைக்கோட்டையா? ஆனால், இந்த பொண்ணுங்க(& பசங்க)ளோட கொஞ்ச நாள் தானே, கடைசி வருடம், எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலைக்குப் போகப் போகிறோம்!

உஷாராணி, "ட்ரஸ் இல்லியேன்னு கவலைப்படாதே! உனக்குப் பிடிச்ச என்னோட ஸ்கர்ட் தரேன், போட்டுக்கோ! மஹாவோட ஷர்ட் டாப் மாட்ச் ஆகும்... வாடியம்மா!" இது எல்லாரும் சென்னைப் பெண்கள். இப்போதைக்கு மலைக்கோட்டைக்கு இவர்கள் எல்லாரும் திரும்பி வரப் போவதில்லை என்று அறிந்து அங்கே "தேவ" தரிசனம் பார்க்க வரும் பசங்களை ஒரு வழியாக்கிவிட்டுத் திரும்புவார்கள் - பாவம், அந்தப் பையன்கள் இரண்டு வாரத்துக்கு சாப்பிட, தூங்க‌ப் போவதில்லை. ஒருமுறை பிரஹதீஸ்வரர் கோவிலில் அப்படித்தான் இவர்கள் அடித்த கூத்து... நான் அதுக்கப்புறம் ஒரு வருஷம் அந்தப் பக்கமே போகவில்லை.

மஹா, "ஹே ட்ரீமர்! இது ஃபைனல் பார்ட்டி! வி ஆர் செலிப்ரேடிங் அவர் ஜாப்ஸ் டூ! கௌதமும் வரான். தெரியும்ல?" என்றாள். கௌதம் என் மனதுக்கினியவன். என்றாவது ஒரு நாள் என் கண்களால் என் கனவுகளை அவனிடம் சொல்லிவிட வேண்டும்.. எண்ணங்களை நானே கலைத்து, "நாந்தான் வரேன்னு சொல்றேனில்ல, எங்கம்மாவுக்கு ஃபோன் சொல்லிட்டு வரேன்" என்றேன். மஹா, "சொன்னேன்ல, அவ வருவான்னு. தம் தம் த தம் த கௌதம்!" என்று பாடினாள். கனவுகளும் வெட்கமுமாய் அங்கிருந்து கலைந்து போனேன்.

அம்மா தம்புமாமா வீட்டில் சமையல் செய்பவர்; தம்புமாமாக்கு ஃபோன் செய்து அம்மாவைக் கூப்பிடச் சொன்னால், மாமா ஆயிரம் சாக்கு சொல்வார்; "படிப்பு எல்லாம் ஒம் பொண்ணு தானே பாத்துக்கறது, புருஷனையும் தேடிடுவாள், பாரு" அதில் தேடிடுவாள் சப்தம் வேறு மாதிரி சொல்வார். அம்மாவிடம் சொன்னால், "ஏண்டி, உன்னையும் ராஜுவையும் படிக்க வச்சதே இந்த சம்பளம் தானே! நீயும் ராஜுவும் வேலைக்குப் போக ஆரமிச்சா, நான் வேலைய விட்டு நின்னுக்கறேன்" என்று விடுவாள். அப்பா வைதிகம் செய்தவர், நான் பிறந்த இரு வருடங்களில் போய் விட்டார். அவர் ஃபோட்டோ தவிர வேறு நினைவுகள் இல்லை.

தம்பு மாமா வீட்டுக்கு ஃபோன் செய்தேன். முக்கியமாய் அம்மாவிடம் சொல்ல வேண்டியது - எனக்கு டிசிஎஸ்ல வேலை கிடைத்து விட்டது என்பது. ஃபோன் செய்தால், தம்புமாமா நான் யாரோடாவது ஊர் சுற்றுகிறேனா, வேலை தேடுகிறேனா, எனக்கு வேலை கிடைத்தால் அம்மா சமையல் வேலைவிட்டு நின்று விடுவாளா என்றெல்லாம் கேட்டு விட்டு, "உங்கண்ணா ராஜு பாங்க் பரிட்சை எழுதினானாமே, அதுல வேலை கிடைச்சுடுத்து, அதான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு போனா.. நீ ஃபோன் பண்ணினா சொல்லச் சொன்னா". மாமாவிடம் எனக்கும் வேலை கிடைத்து விட்டது என்று சொல்லி அவர் நெஞ்செரிச்சலைக் கிளப்ப‌ வேண்டாமேன்னு (அப்புறம் அம்மா தானே பத்தியச் சமையல் வேறு செய்யணும்) சொல்லவில்லை. "சரி மாமா, நானும் கோயிலுக்குத் தான் கிளம்பிட்டிருக்கேன். அங்க பாத்துக்கறேன்" என்று எதையோ சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.

வல்லத்திலிருந்து திருச்சி பஸ்ஸை கண்டக்டர் (எல்லா டிரைவர், கண்டக்டர் பேரும் எங்களுக்குத் தான் தெரியுமே!) பேரைச் சொல்லி நிறுத்தி ஏறிக் கொண்டோம். என்னிடமிருந்து ஓரடி தள்ளி என்னப் பார்த்தவாறே கௌதம். கௌதம் ரகசியமாக "யூ லுக் க்யூட்" என்றான். நான் சங்கடமாக மஹாவை நோட்டமிட்டேன். அவள் மெட்ராஸ் பெண்ணாய் லாகவமாய் ஒரு கண்ணடித்துத் திரும்பிக் கொண்டாள். "மஹா சொன்னாள்" என்று சொன்னான். ஐயோ, இந்த ஓட்டை பஸ்ஸில் தானா இந்த காதல் காவியம் தொடங்க வேண்டும்!! பஸ் லைசன்ஸ் ப்ளேட் நோட் கூடச் செய்யவில்லியேன்னு (கெக்கே பிக்கேவாகத்) தோன்றியது. கௌதம் சிற்சில தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியிருந்தான். ஒரு கவிதைப் போட்டியில் அவன் மூன்றாம் பரிசும், நான் முதல் பரிசும் வாங்க என் ஒருதலைக் காதல் தொடங்கியது (மூணாவது பரிசு வாங்கறவங்களை யாராவது காதலிச்சுத் தானே ஆகணும்? அதே மாதிரி, முதல் பரிசு வாங்கற பொண்ணுக்குக் காதல் தப்பா?). கௌதம் மத்தியதரக் குடும்பம், அவன் அப்பா அரசாங்க குமாஸ்தா என்று மஹா துப்பறிந்து வந்து சொல்லியிருந்தாள்.

"பிள்ளையாரே, நான் சமத்துப் பொண்ணு. இந்த பசங்க தான் கலாட்டா பண்ண வராங்க. அவங்களைக் கண்டுக்காம, என் காதலை நிறைவேத்திடு. அட்வான்ஸா மலைக்கோட்டை ஏறிடுறேன்" என்று மனமார பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன். "நீ திருக்குறள்லாம் படிப்பியாமே" என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது. மெயின்கார்டில் இறங்கி, நண்பர்கள் ஆளாளுக்கு "ஐஸ்க்ரீம்", "இல்ல, கோயில் போயிட்டு அப்புறம்", "நான் இன்னிக்குக் கோயில் வரமுடியாது", "ஏண்டி அப்பவே சொல்லலை?" எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது.... ரோட்டுக்கு அந்தப் பக்கம் விந்தி விந்தி ராஜுவும், கூடவே அம்மாவும்.

அம்மா பெரியதாய் விபூதி இட்டிருந்தாள். நான் கௌதம் பக்கத்திலிருந்து மெதுவாகக் கழண்டு, ரோட்டில் ஓடி "ராஜு கங்க்ராசுலேஷன்ஸ்டா" என்று கத்திவிட்டேன். படிப்பு, போட்டி, பரிசுன்னு எல்லாத்திலியும் நான் பேர் வாங்க, ராஜு எதிலும் சோபிக்காமல் இருந்தான்; பி.காம் மாலை நேரக் கல்லூரியில் படித்தான். அதைத் தவிர தையல் கடை, கோவில் என்று பகுதிநேர ஊழியமும். ராஜுவுக்குச் சிறுவயதில் போலியோவால் ஒரு கால் சூம்பியிருந்தது வேறு. இந்த வேலை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தானே. அம்மா, விபூதித் தீற்றலைவிடப் பெரியதாய்ச் சிரித்து, என்னிடம் "பாத்துடி" என்றாள்.

தம்புமாமாவோடு ஃபோனில் பேசியதையும், பேசாததையும் என்று ராஜுவின் வேலை, என் வேலை பற்றி நான் சொல்லச் சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு கொள்ளவில்லை - "நாங்க மலைக்கோட்டை அடிப்பிள்ளையாரைப் பாத்துட்டு, லட்சுமி சித்தியையும் பாக்கப் போறோம்னு தானேடி சொல்லிட்டு வந்தேன், ஆனாலும் தம்புமாமாவுக்குக் குசும்பு" - என்றாள். அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. திரும்பி ராஜுவின் முகத்தைப் பார்த்ததும், "என்னை தலையெடுக்க வச்சுட்டான்டி எம்பிள்ளை. நாளைக்கு நீயாவது யாரயாணும் கல்யாணம் பண்ணிட்டு எங்களை விட்டுப் போயிடுவே" என்று சிரித்தாள். நானும் "இன்னிக்கு ரொம்ப நல்ல நாள்மா", என்றேன். அதற்குள் கௌதம் ரோடை க்ராஸ் செய்து வந்தான். "நமஸ்காரம் மாமி" என்று அம்மாவிடமும், ராஜுவிடம் "ஹலோ" என்று பேசினான்.

மற்ற தோழிகளும் தோழர்களும் அங்கிருந்து கையாட்ட, அம்மாவும் இங்கிருந்தே கையாட்டினாள். இதுவரை நான் ஆண் தோழர்களை வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை, 10அடிக்கு 10அடி குடிலில் எப்படி அழைத்து வருவது? கௌதமிடம் அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி, "நீங்கள்லாம் கோயில் போயிட்டு வாங்கோ, நாங்க கிளம்பறோம்" என்று ஊருக்குக் கிளம்பினாள். மலைக்கோட்டைக் கோயில் போகும் நண்பர்கள் முன்னே நடக்க, நானும் கௌதமும் நண்பர்களின் பின்னால். கௌதம் என்னிடம் "உங்க அம்மா ரொம்ப சிம்பிள்" என்றான். ஓரம் நைந்த புடைவை சிம்பிள் அல்ல, இருப்பது அவ்வளவே. ராஜுவின் ஷர்ட், பான்ட் தம்பு மாமாவுடையது. நான் நிதானித்து, என் குடும்பக் கதையைச் சொன்னேன். "கஷ்டம் தான்" என்ற கௌதம் மற்ற நண்பர்களோடு சேர்ந்து கொண்டான். மலைக்கோட்டை அடி வரை கூட எங்கள் காதல் பயணிக்கவில்லை.

பி.கு.: பின்னொரு நாள் "வானில் பயணிக்க நினைத்தாலும் என் பாதங்கள் மண்ணில்"னு என்னோட ஆட்டோகிராஃப் நோட்டில் கௌதம் எழுதினான்:-) கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)

சங்கமம் கல்லூரி போட்டியில் இதுவும் சங்கமம்.

Saturday, March 14, 2009

புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)


உண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய சமுதாயங்களின் கேள்விகளுக்கான விடைகளை புனிதக் குரான், ஹதீத் சொற்றொடர்களிலிருந்து புரிதல்களுடன் ஆரம்பிக்கிறது. மேற்படி சொற்றொடர்களை வேறு விதங்களில் புரிதல் இஸ்லாமிய வழக்கத்துக்கு எதிரானதா இல்லியா என்பது அவரவர் சொந்த விஷயம் என்று அதை டீல்ல விட்டுடறேன் (இந்த எண்ணம் தோணும் வரை என்னால் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க முடியவில்லை). புட்டோ இறப்பதற்கு முன் எழுதி, இறந்த பின் வெளிவந்த புத்தகம் என்பதையும் கவனிக்க.

புட்டோவின் அரசியல் பின்புலம், எழுத்துத் திறமை எல்லாம் தெரிந்த விஷயம். இந்த புத்தகத்தின் ஆடியன்ஸ் (எழுதினவர் பார்வையில்) மேலை நாடுகள் தாம்; எடுத்துக்காட்டாக, "மற்ற பெரும் மதங்கள் மாற்று-மதத்தினரை நடத்துவதற்கு நேர்மாறாக, முஸ்லிம்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ‘வேத மறையினர்’ என்றே கருதுகின்றனர். எனவே ஓஸாமா பின் லாடென் உள்ளிட்ட உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதிகள் இஸ்லாத்தைப் பற்றிய தம் முழு அறியாமையையே காட்டுகின்றனர்” என்று கூறுகிறார்;-) [பக். 37] இன்னும் சொல்கிறார்: “இஸ்லாத்தைப் பொறுத்த வரை, ஒரே-இறைத் தத்துவம் கொண்ட மதங்கள் எல்லாமே மோட்சத்தை நோக்கியே செல்கின்றன. இஸ்லாத்தில், முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஒரே-இறைத் தத்துவத்தை நம்புவோர் அனைவருமே அவரவர் பூவுலகில் கொண்ட நடத்தை கொண்டே கடவுளால் கணிக்கப்படுவர், அம்மனிதர்களின் மதங்களால் அல்ல”. (கொலம்பஸ், கொலம்பஸ், எனக்கும் - இன்னும் கோடானு கோடியினருக்கும் - விட்டாச்சு லீவு!)

அவங்க புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்த புரட்சி/மக்களாட்சி/மறுமலர்ச்சி பற்றி உலக வரலாற்றுப் பாடங்கள் படிக்கிறாங்க. அவங்க [பக். 84/85] இரண்டு பக்கங்களில் எழுதியதை புள்ளிகளில் குறுக்கிச் சொல்கிறேன்: "இஸ்லாமிய உலகில், பலகாலங்களாய் வாழும் மக்களாட்சிகள் உண்டு. இதற்கு புனிதக் குரானின் சொற்கள் பொறுப்பல்ல! ... இதற்கு இரண்டு காரணங்கள்: இஸ்லாத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குள் மறைஞானத்தை ஒட்டி நிகழும் யுத்தம்; மேலை நாடுகளின் காலனீய ஆதிக்கம் - இவையே! ... முஸ்லிம் மன்னராட்சி என்பது நியாயமான மதச்சார்பற்ற அரசின் வழிகளை மக்களுடன் கலந்தாலோசனை செய்யும் அல்-குரானின் வழிகளோடு இணைக்கிறது...இஸ்லாமிய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தைக் குறித்து அமெரிக்கா செய்திருக்கும் ஆராய்ச்சி முஸ்லிம் வழக்கங்களை அறியாமல் செய்யப்பட்ட ஆராய்ச்சியாகும் - எனவே முஸ்லிம் நாடுகளில் சுதந்திரம் இல்லை என்பது பிழை! ” எனவே சரியான அரசியல் ஒப்புநோக்கு செய்யிறேன்னுட்டு, இஸ்லாமிய நாடுகள் பற்றின வரலாற்றுப் பாடங்கள் (அமெரிக்க இடதுசாரி ஒப்புக் கொள்ளும் வகையில்!) படிக்கிறாங்க! பல எடுத்துக்காட்டுக்களும் அமெரிக்க நாட்டினருக்குப் புரியும் வகையில் இருக்கு: “சுதந்திரம் என்பது இந்தோனேஷியாவில் இருப்பவருக்கும் லூயிசியானாவில் இருப்பவருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும்”. இந்தோனேஷியா மக்கள் தொகையில் உலகளவில் நான்காவது பெரிய நாடு - 230மிலியன்; லூயிசியானா, அமெரிக்க தென் மாநிலம், 5மிலியன் மக்கள் தொகை!

இந்த புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடக்கிற / நடந்த அரசாட்சி முறைகள், புரட்சி எல்லாவற்றுக்கும் ஒரு (மேலை நாட்டு) அரசியல் சார்ந்த மழுப்பல் இருக்கு. பின் அட்டை முழுக்க, புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்க (ஜனநாயகக் கட்சி) அரசியல் பிரபலங்கள் எழுதியிருக்காங்க. இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ள குறிப்பிடப்படும் நாடுகள் தயாரில்லை என்பது ஊறுகாய்க் காரம் மாதிரி (தெரிஞ்ச விஷயம்). பெநசிர் புட்டோ இறக்குமுன் எழுதிமுடித்த, மேலை ஆதரவோடு அரசியலில் மீண்டு வர முயற்சி செய்யும் போது எழுதியது என்பது தான் இந்த புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணி, வேறு விஷயம் ஏதுமில்லை - எ.தா.க! இந்த புத்தகத்தைப் படித்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம்னு நேரங்கடந்து அறிந்து கொண்டேன்.

மொத்தத்தில், பெர்ஸிபோலிஸ்/சமரசம் - இரண்டு புத்தகங்களுமே இஸ்லாமியப் புரட்சிக்குடும்பங்களில் பிறந்த, அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்த, இரண்டு வித்தியாசமான பெண்கள் எழுதினது. 1969இல் பிறந்த அரசியல்/கட்சி எதிர்காலம் கருதாத, மனம்போன போக்கில் வாழும் மர்ஃஜானே சாட்ராபி பர்தாவின் மேலான வெறுப்பை வெளிப்படையாகவே சொன்னார்; 1953இல் பிறந்து அரசியல்/கட்சி எதிர்காலத்தையே கருத்தில் கொண்ட பெநசிர் புட்டோவின் கைகள் எப்பவுமே புகைப்படம் எடுக்குமுன் ஹிஜாப்பை சரி செய்யும். புத்தகங்கள் அவரவர் வாழ்வியல் நேர்மையைக் காட்டுகின்றன.

புத்தக அட்டைப்படம், விமர்சனம் இன்னும் இணையத்தில்.

Thursday, March 05, 2009

விட்டு விடுதலையாகாமல்...நாங்கள்!

எப்போது பார்த்தாலும்
கூடத்தின் 12 அடி உயரக் கண்ணாடியை
வெளியிருந்து
கொத்திக் கொண்டே இருந்தது
அந்த சிட்டுக்குருவி.

அதை விரட்டுவதற்கென்றே,
உள்ளிருந்து துரத்த
தலையணைகளும் மென்பந்துகளும்.
எத்தனை முறை விரட்டினாலும்
அம்பெனக் கிளம்பி
திரும்பவும் கண்ணாடிக்கே வந்தது.

10 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட
எங்கள் கூடத்துக்குள் சிறைபட்ட
தன் குடும்ப நினைவுகளை
விடுதலை செய்யப் போராடியதோ?
இல்லை, இரு மாதங்களுக்கு முன்
செத்துக் கிடந்த மற்றொரு குருவியின்
சொந்தமோ?

இந்த முட்டாள் குருவி
செத்துத் தொலையாமல் இருக்க
கடவுளை வேண்டினேன்.

இப்போது எல்லாம் கண்ணாடி ஜன்னலில்
வான்முகம் தெரிவதில்லை.
இன்றோ,
குருவிக்கு ஒரு குட்டிக் குருவியும் துணை.
என் கருவிருந்த குட்டிக்குருவிகளோ
வெளியிலிருக்கும் குருவிகளின் கட்சியே -
எங்கள் கூடு அக்குருவிகளுக்குச் சொந்தமென.

எழுத்தாளர் மாதவராஜ் அவர்களின் படைப்பிலிருந்து (விட்டு விடுதலையாகாமல்...) என் “மட்டமான காப்பி”, மற்றும் என் வீட்டு நிசத்தின் பாதிப்பு.

Monday, March 02, 2009

புத்தக விமர்சனம் - சாட்ராபி: பெர்ஸிபோலிஸ்-2.

பெண்களுக்கு பதின்ம வயதில் ஆண்களை எதிர் கொள்ளுவது மிகச் சிக்கலானது! நம்மூர்ல சான்ஸே இல்லை; அதுவும் வயசு வித்தியாசம் பார்க்காம பெண்களைக் கிண்டல் செய்வாங்க. பொண்ணுங்க என்ன செய்வோம்? தெரிஞ்ச பசங்க என்றால், பேரைச் சொல்லிக் கூப்பிட்டு “ஏன்டா அப்பிடி கிண்டல் பேசறே” என்று கேட்டால் அழுதுடுங்க;-) ஏதாவது தெரியாத பசங்க கிண்டல் அடிச்சா, அதுவும் ஜோக்கா நல்லா இருந்தா, சிரிக்கவே முடியாது, சிக்னல் ப்ராப்ளம் வந்துடும்! யாராவது நல்லா இருக்கானேன்னு திரும்பிப் பாத்தா நம்மூர்ல வாழ்நாள் சிறை:-) ஜோக்கடிச்சாலும்..., உண்மையில் கட்டுப்பாடுகள் நிறைந்தவை பெண்களின் வாழ்க்கை - எல்லா நாடுகளிலுமே.

இரானிலும் கூட. பர்தா, முக அலங்காரம் கூடாது, பின்பாகம்(!) தெரியாத உடை / நடை கட்டுப்பாடுகள்.... இதையெல்லாம் மீறி பெண்களின் வாழ்க்கையை - பெர்ஸிபோலிஸ் இரண்டாம் பாகத்தில், பதின்ம வயது முதல் மர்ஃஜானேவின் 24 வயது வரை - இரான், ஆஸ்ட்ரியா, திரும்பி இரான், ஃப்ரான்ஸ்னு நீளும் தன் வாழ்க்கையை நேர்மையா (மொழிப் பிரசினை தொடங்கி, உடல் மாற்றங்கள், போதைப் பழக்கம்னு எல்லா பிரசினைகளையும்) சித்திரங்களில் எழுதியிருக்கிறார் மர்ஃஜானே சாட்ராபி. மர்ஃஜானே சாட்ராபியின் பெர்ஸிபோலிஸ் பத்தி பிரபலப் பதிவர்கள் எழுதியிருக்காங்க. நான் பிரபலம் இல்லை; சாதாரணப் பதிவர். அதுனால, பெர்ஸிபோலிஸ்-2 (2ம் பாகம்) பத்தி எழுதறேன்.

பெர்ஸிபோலிஸ் என்பது பெர்சியாவின் தலைநகரத்தின் பழைய பெயர். உயர்நடுத்தரக் குடும்பத்தில பிறந்த மர்ஃஜானே சாட்ராபி, பக்கத்தில் உங்களைப் பாத்து சிரிக்கறது அவங்க தான். (உச்சரிப்பு இங்கே), அவங்க பேட்டி இங்கே... (ஷாவின் பல மனைவிகளில் ஒருவரோட எள்ளுப் பேத்தின்னு சொல்லிக்கிறாங்க தன்னை! இல்லைன்னு சொல்றவங்களும் இருக்காங்க) நிறையவே துடுக்கு! சிறுவயதிலேயே அவங்க துடுக்குத் தனத்தால, ஈரானில் நிகழ்ந்த புரட்சியின் போது வம்புல மாட்டிக்கப் போறாங்கன்னு சொல்லி இடதுசாரி எண்ணங்களுடைய (இன்ஜினியர்) அப்பா, (ஆடை டிஸைனர்) அம்மா, போராளிப் பாட்டி எல்லாரும் சிறு வயதிலேயே ஆஸ்ட்ரியாவுக்கு படிக்க அனுப்பிடறாங்க. அவங்க படிக்காமல், உள்ளூர் பெண்களைப் போல இருக்க ஆசைப்பட்டு (அந்த வயசிலே வேறு என்ன செய்வாங்க?) எதுவும் ஒத்துவராமல் 4 வருடங்களில் திரும்ப ஊருக்கு வந்துடறாங்க. ஊர்லயும் தனக்குக் காதல் என்று தோன்றிய ஒருவரை மணம் செய்து கொண்டு விரைவிலேயே விவாகரத்தும். அப்புறம் ஃப்ரான்ஸுக்கு திரும்பிப் போய் சித்திரம் வரைவதில் படிப்பும் தொழிலும். Maus புத்தகத்தைப் பார்த்த தாக்கத்தில், அதே போல் தன்கதையை எல்லாமே நகைச்சித்திரங்களாக எழுதியிருக்காங்க.

எந்த போராளியின் சின்ன வயசு கதையிலும் ஒரு உத்வேகம் இருக்கும் - அது கட்டாயம் இதுல மிஸ்ஸிங். இந்த அளவு எண்ணம், பணம் ரெண்டுத்திலியுமே சுதந்திரம் கொடுக்கும் அப்பா, அம்மா, பாட்டி இருந்தாலும், தன்னோட சந்தோஷங்கள் தான் எதையும் விட முக்கியம் என்னும் ஒரு மேட்டிமைத்தனம் (மொள்ளமாரித்தனம்?) கதை முழுக்க தெரியுது... பிரச்னைகளை உருவாக்கி அதிலிருந்து வெளியேறும் உதவியையும் பெறுகிறார்:-( (”பரிட்சைக்கு பயமா இருக்கு அம்மா, சாமி கிட்ட வேண்டிக்கோ”, “இந்தத் திருமணத்தை முறிச்சுக்கிறேன், என்னை வெளிநாட்டுக்கு அனுப்புங்க அப்பா”). ஆனால், மிகுந்த அரவணைப்போடு இரானில் வளர்ந்தவர், பதின்ம வயதில் தனியாய் ஆஸ்ட்ரியாவுக்குப் போய் அங்கே தங்க சரியாய் இடம் இல்லாமல் இடம் மாறி, இடம் மாறி வாழுவதை விவரிக்கும் போது பாவமாத் தான் இருக்கு.

சரி, இந்த புத்தகத்தின் சிறப்பு தான் என்ன? எழுத்தாளரின் எண்ண நேர்மை. இரான் திரும்பியதும், பல்கலைக்கு நேர்முகத்தேர்வுல முல்லா கிட்ட ”ஆஸ்ட்ரியாவில பர்தா அணியவில்லை; எனக்கு அரபி தெரியாது”ன்னு கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மை. போதைப் பழக்கத்தையோ, அல்லது ஆஸ்ட்ரியாவில் சந்திக்கிற மாணவர்களின் வாழ்க்கையை (ஒருமாதிரி க்யூட்! ரசிச்சேன்!) நேர்மையா சொல்லுகிறார். அவருடைய சுய எள்ளல் நல்லாவே இருக்கு - தன்னைப் பற்றி வரைகிற படங்களும் சரி, சொற்களும் சரி, சூப்பரா விழுது!

நம்மூர் போலவே (முதல் பத்திக்கு வந்துட்டோமே!) ஆண்களின் உலகத்தில் வளர்ந்து போராளியாக, நேர்மையான உணர்வுகளோடு இருப்பது கஷ்டம் தான்! இரானிலோ, ஓவியப் பாட வகுப்பில் கூட, மாடல் பெண் முழுக்க பர்தா அணிந்து அமர்கிறார். இரானில் புதிய ஆட்சியின் கீழ், ஆண்களின் பார்வைக் கோணலைச் சரி செய்ய, பெண்களின் நடைக்கும் உடைக்கும் ஏற்படுத்தப்படுகிற கட்டுப்பாடுகள் அதிகரிக்கின்றன. மேல்குடி இரானியப் பெண்கள் அந்த கெடுபிடியிலும் ரகசிய பார்ட்டி, காதல்னு இருக்காங்க. புத்தகத்தைப் படிக்கும் போது, பர்தாவைத் தவிர்த்துப் பார்த்தா, நம்மூர் நினைவு தான் எனக்கு முழுக்க! (நம்மூர் ஆண்களின் உலகம் இல்லைன்னு சொல்பவர்கள் எல்லாரும் பெண்ணுடை தரித்து கூட்டம் நிறைந்த நேரத்தில் சென்னை மாநகர பஸ்ஸில் ஏறி வர பிடி-சாபம்! இதுல மங்களூரு ஸ்ரீராம் சேனே வேற நினைவுக்கு வந்து தொலைக்குது!!!)

இரண்டே மணிநேரத்தில் முடிக்கக் கூடிய சித்திரப் புத்தகம். முடிந்தால், பெர்ஸிபோலிஸ் முதல் பாகம் முடித்து விட்டுப் படிக்கவும்.