COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, June 21, 2011

இந்த வருட கோடை விடுமுறை

எங்க வீட்டு வம்பர்கள் - முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்கிற மூத்தோர் சொற்படி, எங்க அம்மாவை நான் படுத்திய பாடு எனக்கு வந்து விடிகிறது - இந்த கோடை விடுமுறையில் செய்யும் சில வம்புகள்:

வெளியில் கடைகளில் மேலே போகிற நகரும்-மாடிப்படிகளில் பொறுமையாக கீழே இறங்கி வருவது - நான் எவ்வளவு கூப்பிட்டாலும் அவர்களுக்கு காதில் விழாத பொறுமை!

வெளியில் போனால், தமிழே புரியாத மாதிரி நடிப்பது - ஹிஹி ஆங்கிலத்தில் திட்ட வேணாமே என்ற நல்ல மனசில் நான் தமிழில் திட்டிக் கொண்டிருப்பேன்...

சுற்றி சுற்றி வந்து அமெரிக்க இந்திய மொழியில் (இவர்களே எதோ உளறிக் கொண்டு) "பலா பலா பலா" என்று கத்தியவாறே ஓடுவது

கடைக்கு வந்து இப்படி மானத்தை வாங்கறியே என்றால், நேரே போய் கடையின் கண்ணாடிச் சுவரில் தலையை முட்டிக் கொண்டு தமிழில் "ஐயோ, முருகா காப்பாத்து" என்று சொல்வது (அம்மாவை கேலி செய்வதாம்)

அப்பா வீட்டுக்கு வந்ததும், அவர் போட்டிருக்கும் சட்டை, உள்சட்டையையும் சேர்த்து தலைக்கு மேலே கொண்டு வந்து அப்பாவை "ஜெயிலில் போட்டு" விட்டு அப்பாவை சுற்றி வந்து அவரை அழ வைத்தல்.


வீட்டுக்கு அருகில் இருக்கும் ஓடையிலிருந்து கண்டதையும் கொண்டு வந்து இலை தழைகளில் சுற்றி வைத்து அம்மாவுக்கு "அன்புப் பரிசு" ஆகக் கொடுத்தல், பல சமயம் அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய "அன்புப் பரிசு" மறந்து போய் படுக்கை/சாப்பிடும் டேபிள் மேலே பத்திரமாக இருக்கும்...

இன்றைய கடற் கொள்ளை விளையாட்டு நன்றாக இருக்கே என்று நான் நினைப்பதற்குள், சண்டை வந்து முந்தா நாள் விளையாடின விளையாட்டு வேறொன்று நடுவில் ஓடும்.

அவர்களின் சண்டையின் போது நான் சமரசம் செய்தால், செய்த இரண்டாம் நிமிடம் என்னை கேலி செய்தல்.

ஏன் இத்தனை லூட்டி என்றால், இந்த குழந்தைப் பருவம் முடிந்து விடப் போகிறதே என்ற கவலை அவர்களுக்கு.

இந்த கோடை விடுமுறை முடிந்து விடப் போகிறதே என்ற கவலை எனக்கு. உங்களையும் இழுத்துட்டு எப்படி தான் இந்தியா பயணம் போவேனோ, ப்ளேன் கதவை திறந்து நான் அண்டார்க்டிக் கடலில் குதிக்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.