COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tuesday, September 27, 2011

வேப்ப முத்து -

வேப்ப முத்து

தமிழோவியத்தில் வெளி வந்த என் சிறுகதை (முழுக்கப் படிக்க சுட்டியில் தட்டவும்!)


indiangirl1 வேப்ப முத்துஉள்ளேயிருந்து மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால், ஊருக்கும் மணக்கும். ஆனால், சமைத்து முடித்து வீட்டினர் சாப்பிட்டப்புறம் மீனா சாப்பிடும் போது மணி இரண்டாகி விடும். இப்பொழுதிருக்கிற பசிக்கு, யாருக்கும் தெரியாமல் சிறியதாய் தேங்காயிலிருந்து கீறி எடுத்து வந்ததை கைக்குள் வைத்து கொல்லைப்பக்கம் போய், வேப்ப மரத்தின் கீழ், முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டாள். கொல்லைப் பக்கம் முழுக்க வேப்ப மரத்தின் நிழல். பறவைகள் பழுத்த வேப்பம் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் எச்சம் மேலே விழாமல் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் மீனா.
மீனாவுக்கு எட்டு வயது வரை, பெற்றோர் வீட்டில் இருந்த போது மீன் குழம்பு சாப்பிட வழி இருக்கவில்லை. ஆனாலும், இங்கே வந்து இரண்டு வருடங்களில் நல்ல சாப்பாட்டு ருசி கண்டாயிற்று.  வசந்தாக்கா தன் இரட்டைக் குழந்தைகளை கவனிக்க, தன் உறவுக்கார வள்ளியின் மகளான மீனாவைக் கொண்டு வந்து வைத்திருந்தார். எட்டு வயதுத் தன்னம்பிக்கையோடு மீனா தன் தம்பி மணியை கவனிப்பது போலவே இரட்டைக்குழந்தைகள் ராஜேஷ், ராஜஸ்ரீ இருவரையும் கவனித்துக் கொண்டாள். அந்த பாசத்துக்காக, வசந்தாக்காவும் மீனாவிடம் அன்போடு இருப்பாள். யாரும் கவனிக்காத போது எப்போதேனும் மீனாவுக்கு மிட்டாய் வாங்க காசு கிடைக்கும். மாமியாரும் குழந்தைகளும் தூங்கி, வசந்தாக்காவின் கணவர் சுரேஷ் மாமா கடையை கவனிக்கப் போன மதியப் பொழுதுகளில், வசந்தாக்கா மீனாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.
ஆனாலும், விழித்துக் கொண்டிருந்த போதெல்லாம் வசந்தாக்காவின் மாமியாரின் கண்கள் மீனாவையே கவனித்துக் கொண்டிருக்கும். மாமியார் நடக்க முடியாதென்றாலும், உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாரம் செய்து கொண்டிருப்பார். அது தான், மீனாவுக்குக் கொள்ளைப்பசியாய் இருந்தாலும், சின்ன தேங்காய்க்கீற்றை ரகசியமாய் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கத்தில் மீனா சாப்பிட்டுக் கொண்டிருந்ததன் காரணம்.
தேங்காய்க் கீற்றை கையில் மறைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கொல்லைப் பக்கம் இருந்தவளை, வசந்தாக்கா கூப்பிட்டாள். குழந்தைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர். வசந்தாக்காவுக்குக் கூட மாட மீனா உதவி செய்து விட்டு, மாமியாருக்கும் சுரேஷ் மாமாவுக்கும் பரிமாறி, வசந்தாக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தனக்கும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டாள் மீனா.  சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது, புரை ஏறியது. “அம்மா நினைக்கிறா அக்கா ” என்றாள் மீனா. புரை எறினதற்காக மீனாவின் தலையைத் தடவிக் கொடுத்த வசந்தாக்கா, “உங்க அம்மா வந்து போயி ஒரு மாசமாச்சில்ல, உன்னைப் பாக்க வருவாளாயிருக்கும்!” என்றாள்.


.......................மேலும் படிக்க: http://www.tamiloviam.com/site/?p=1920