உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

மக்களே, ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!

இந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ (1). இது பத்தி ஞாநி ("ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க. இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம்? அரசியல்வாதிகளுக்குத் தான்! நீங்க ஞாநியுடைய ஒரிஜினல் வாதம் பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க?) என்று சொல்றாரு. ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க!!!

49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது "மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க
விருப்பமில்லை" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.(2). இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல!)

குண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க). 1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் "வோட்டுப்பட்டி ஞாநி" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி (3) 49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம். கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே?

49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது!) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா? பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில! தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது? தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் "ஆதரவாளர்கள்", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான்! எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்!!

உருப்படியா இரண்டு யோசனைகள் (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):
1. ஓட்டுப் போடுவது சில நாடுகளில் கட்டாயம் (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும். அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா? படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் (4). பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.

2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு). தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.

ஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு. ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும். அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தரவு/சுட்டிகள்:
1. இந்தியத்தேர்தல் விதிகள் இங்கே.
2. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.
3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: வித்யா, ஊர்சுற்றி, அருண்குமார்.
4. பத்ரி சார் பதிவிலே கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட!




மீள்பதிவு!

கைப்பை பற்றியதல்ல‌

அப்பவும் இப்பவும்
கண்மை வளர்க்கவும், அடையாளங்கள் தொடுக்கவும்,
என் கைப்பையில் பலவும் உண்டு.

காதல் தருணங்களில்,
அழகின் சின்னமான கைப்பை.
"என்ன ரகசியம் வச்சிருக்கே
இந்த கைப்பையில்?"

இன்றைக்கு
குழந்தைக்குப் பிடித்த தின்பண்டம் மட்டுமல்ல,
அவன் தின்று போட்ட இனிப்பும்
ஒட்டிக் கொண்டு....
"அம்மா பையில வச்சிடு"

நாளைக்கு, கைப்பையில்
அவருக்கும் எனக்குமாய்
மருந்தும் இருக்கலாம்;
கண்மை கைப்பையில் இருந்து
காணாமல் போகலாம்.

வெவ்வேறு நிறங்களில், விதங்களில்
கைப்பை மட்டும் வரும்
அப்பவும் இப்பவும்.

50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்

பெண் பதிவர்களுக்கு - கணிணி சார்ந்த பதிவர்களோ, இல்லை எதுவானாலும் - இந்த தொல்லை தாங்க. உலகம் முழுக்க!!!!

வெள்ளி காலை நான் படிக்கும் ஒரு கணிணி இதழில் வந்த கார்ட்டூன் இது. ஒரு பெண் பதிவர் ஒரு செய்தியைச் சொன்னால், அந்த செய்தியை விட அந்தம்மா "என்னா ஃபிகர்" என்று கவலைப்பட ஒரு கூட்டம் இருக்கு.... இருக்காம்!!!



இந்த மாதிரி இல்லாத உங்களைப் போன்ற‌ நல்ல பதிவர்களுக்கு மொழியாக்கம் தேவையில்லை என்பதால, தமிழ்ல கொடுக்கலை.

:-)

_/\_ நன்றி/Thanks To: http://www.xkcd.com/322/ _/\_

புரியாத பெண்கள் - 3

இந்த வாரம் ஒரு சில தோழிகளின் அனுபவ, மற்றும் கருத்துக்களின் கலவைத் தொகுப்பாக ஒரு கற்பனைப் படைப்பு.

புரியாத பெண்கள் - 1
புரியாத பெண்கள் - 2

எங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பெர்ட் (நாய்) 'ரின்டே'வை அதன் காலைக் கடன்களுக்காக நான் கூட்டிக் கொண்டு வெளியே சென்ற போது, பூஜா ஒரு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து “ஹாய்” என்று தொடங்கியது எங்கள் அறிமுகம் ('ரின்டே'வை நான் நாய் என்று சொன்னது என் கணவர் ராஜாமணிக்கு தெரிந்தால், அவ்வளவு தான்:-).

பூஜாவுக்கு இரண்டு மகன்கள், 3வயசு & 5வயசில். என் குழந்தைகள் சிறிது பெரியவர்கள் என்றாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எங்க நட்பு கொஞ்சம் மெதுவா வளர்ந்தது.... என் பிள்ளை கண்ணன் அந்த பசங்களைப் பார்த்தாலே நிண்டெண்டோ விளையாட்டு சாமான்களை அவசரமாய் மறைத்து வைப்பான். பூஜாவின் குழந்தைகள் பேப்பரைக் கிழித்து சிறுசிறு துகள்களாய்ப் போடுவது, விளையாட்டுப் பொருட்களை உடைத்து வைப்பதுன்னு நிறைய சேதம் செய்து கொண்டிருந்தார்கள். பூஜா தன் பிள்ளைகளைக் கண்டிக்காமலும், சுத்தம் செய்யாமலும் கூட்டிக் கொண்டு போய் விடுவாள்.

பூஜாவின் கணவன் வேறு, அவ்வப்போ, “உங்க வீடு எங்க வீட்டை விடச் சின்னதோ?”, “உங்க வீட்டு பழைய ஓனர் சுருட்டு பிடிச்சிருப்பாரோ?”, “உங்க வீட்டு சோஃபா மாதிரியே எங்க கிட்ட இருந்தது, அசிங்கமாயிருக்குன்னு போன வருஷம் தான் தூக்கி எறிந்தோம்” என்றெல்லாம் ஊக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்:-)

பூஜா, "செயின்ட் லூயிஸ்" நகரத்துக்கு ஒரு வார இறுதிப் பயணம் போயிட்டு வரலாம்னு சொன்னதால‌, எல்லாருமா போனோம். ஊர்ச் சுற்றி விட்டு சனி இரவு அன்று, சாப்பிட்டு முடித்தபின் நாங்கள் - பூஜா, அவள் கணவர் சூர்யா, நான், ராஜாமணி - வாடகைக்கு எடுத்திருந்த டவுன்ஹவுஸில் வெட்டிப் பேச்சுக்காக அமர்ந்தோம். நாள் முழுக்க போட்ட ஆட்டத்தில், குழந்தைகள் எல்லாருமே தூங்கி விட்டிருந்தனர். அப்போது, கோடிக் கணக்கில் மதிப்புள்ள வீடுகள் அடையாறிலும் தஞ்சையிலும் தங்களுக்கு சொந்தம் என்று பூஜா சொன்னாள். எனக்கு அது புது நியூஸ்.

“கடவுள் நம்பிக்கை இருக்கா?” என்று பூஜாவின் கணவர் சூர்யா தொடங்கினார்.

“இல்லைன்னு சொல்ல மாட்டேன்... நம்மை மீறின சக்திக்கு, அது மக்களின் சக்தியாகவே இருக்கலாம், அதை கடவுள்னு சொல்லுவதில் தப்பு என்ன‌?” என்று சிரித்தேன் நான். மனிதர்களே கடவுள், அதுனால உருவ வழிபாட்டுல தப்பு இல்ல என்பது என் கட்சி. ராஜாமணி தீவிர அனுமான் பக்தர். பேசாமல் சிரித்த ராஜாமணியைப் பார்த்து நான் ஒரு புன்முறுவல் கொடுத்தேன்.

“கடவுள்னா யாரு? நம் உருவகம் தானே? மதம் மக்களைக் கட்டிப் போடத் தானே பிறந்தது?” இது பூஜா.

“கடவுள் நம்பிக்கை நமக்கு ஒத்து வந்தால் அதை பின்பற்றலாம் - மனுசங்க, மிருகங்களுக்கு தொல்லை இல்லாத பட்சத்தில்! கணக்கு, அறிவியல்னு எல்லாத்துக்கும் கட்டமைப்பு இருக்கறதுனால, மதம் இருப்பதில் தப்பு இல்லை - அது யாரையும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. எதுவானாலும் ஒரு உயிர் இன்னொரு உயிரை விடத் தாழ்வுன்னு சொல்லவே கூடாது” என்று நான் சொன்னேன்.

“திரௌபதிக்கு எத்தனை கணவர்கள்? க்ருஷ்ண அவதாரத்தில் எத்தனை மனைவிகள்? யப்பா! இதெல்லாம் சரியா?” என்றாள் பூஜா. இன்னும் மேலோட்டமாக நிறைய புராண கேள்விகள் சூர்யா கேட்டார். இப்ப யோசித்தால், இதே வரிகளைச் சொல்லித் தான் அவங்க எல்லாரிடமும் மார்க்கட்டிங் தொடங்கியிருப்பாங்கன்னு நல்லா புரியுது.

பேச்சு திசை மாற, மாற, ஒரு வழியாய், பூஜா விஷயத்துக்கு வந்தாள். ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து , “ஸ்ரீஅப்பன் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று ராஜாமணிக்கு அருகில் அமர்ந்தாள்.

“உங்க வீட்டு கெட்-டுகேதர்ல ஸ்ரீஅப்பன் படம் பாத்திருக்கேன். அவரைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே” - இது ராஜாமணி. தமிழ் இணையத்தில் மூழ்கி முத்தெடுத்த எனக்கு ஸ்ரீஅப்பன் பற்றி நன்றாகவே தெரியும். பெயர் பெற்ற “குருஜி”. ஓரிரு கொலை வழக்கில் மாட்டினார், கொலை வழக்குகளும் மாண்டு போயின. இப்ப பக்தி மார்க்கம் பற்றி சிடிக்கள் நிறைய வெளியிடுகிறார், மார்க்கெட் போன பல இந்திய பிரபலங்களுக்கு அருள் பாலிக்கிறார், ஸ்ரீஅப்பன் விடியோக்களில் அவர் தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தானாய் உண்டாகிறது... இப்படி எனக்கு நிறையவே தெரியும், ராஜாமணிக்கு என்னை மாதிரி வம்பு தெரியாது:-)

ஸ்ரீஅப்பன் பற்றி, தலையைச் சாய்த்து கண்கள் படபடக்க தலைமுடியைச் சுருட்டிச் சுருட்டி, பூஜா சொன்னது அதிகம். அவர் பிறந்த அன்றே காக்கை கூவியது, மயில் அகவியது, ஆமை அலறியது. அவர் பள்ளிக்குப் போய் தனக்குப் பாடம் சொல்ல வந்த‌ வாத்தியாருக்கெல்லாம் பாடம் எடுத்தார். இறைவன் அவருடைய கண் முன்னே இரண்டு முறை வந்து ‘உலகை மாற்று’ என்று ஆணை இட்டார். முதல் முறை கேளாமல் இருந்தாலும், ஸ்ரீஅப்பன் இரண்டாம் முறை தம் ஆன்மிகப்பயணம் தொடங்கினார். ‘ஓஹோ அதுனால தான் அவரு ரெண்டு முறை கண்ணாலம் கட்டிகிட்டாரு’ என்று கேட்க நினைத்து, “அவர் கல்யாணம் ஆனவர்ல?” என்றேன் நான்.

திரும்பி என் கண்களைச் சந்தித்த பூஜா, “கல்யாணம் செய்யாத ரிஷிபுங்கவர்கள் கிட்ட பிள்ளைங்களைப் படிக்க யாரும் நம்பி அனுப்புவதில்லை. கல்யாணம் ஒரு சடங்கு தான் சுமா! நீ உன் பார்வையை மாத்திக்கணும்” என்றாள். எனக்கு பயமாய் இருந்தது. ஜூஸில் வேறு ஏதாவது கலந்திருக்குமோ?

நான் பலமுறை “வேண்டாம்” என்று சொல்லியும், பூஜாவும், சூர்யாவும் ராஜாமணியிடம் ஸ்ரீஅப்பனின் உலகளாவிய கோவில்களை வெப்சைட்டில் காட்டி, இரண்டு ஆன்மிக வகுப்புகளுக்கு பணம் வாங்கிக் கொண்டார்கள் - ஆயிரம் டாலர் அநாவசியச் செலவு:-( அடுத்த இந்திய பயணத்தின் போது அவர்களின் இந்திய மையங்களில் வந்து தங்கிப் போனால் $5,000இல் அமைதி கிட்டும் என்றும் சூர்யா சொன்னார். பின்னர், ராஜாமணி சிரித்தவாறே, “எதுக்கு போன ராமநவமிக்கு ராமர் படத்துக்கு சூடம் காட்டி, பானகம் நீர்மோர் செஞ்சீங்க?” என்றான்.

அதன்பின், வேறொரு நாள் என் சின்ன பிள்ளையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த‌ பூஜா, அங்கு வந்திருந்த‌ எல்லாருக்கும் இந்த ஆன்மிக அனுபவங்களை விற்க முனைந்தாள். “இல்லம்மா, நான் இன்னொரு அநாதை ஆசிரமத்துக்கு மாதந்தோறும் கொடுக்கிறேன்” என்ற வெள்ளைத் தோழியிடம் பூஜா சொன்னது டாப்: “அந்த ஆசிரமத்து நம்பர் கொடுங்க. அவங்க எங்க டிக்கட்டுகளை விற்றால், உங்கள் ஆசிரமத்துக்கு ஒரு கட் கொடுக்கிறேன்”. ஸ்ரீஅப்பனின் 'ஸ்ரீமோட்சா' கூட்டத்தில் இந்த கமிஷன் அவரவர் சீனியாரிட்டி பொறுத்ததாம்.

நாங்க விலை கொடுத்த ஆன்மிகத்தை வாங்கிக் கொள்ள ஸ்ரீஅப்பன் ஆசிரமத்துக்குப் போகவே இல்லை. "ஸ்ரீஅப்பன் அமெரிக்கா வராரு, 6,000 டாலர் கொடுத்தீங்கன்னா, இரண்டு நாள் அவருடன் தங்கலாம், எல்லாருக்கும் சிடி கொடுப்பாரு"ன்னு ஒருமுறை பூஜா ஃபோன் செய்தப்போ, 'இனி என்னைக் கூப்பிடாதே'ன்னு சொல்லிட்டேன்.

'ஆம்வே' சுட்ட ஆம்லெட்டை கொத்து பரோட்டா ஸ்டைல்ல‌ சுடறாங்கப்பா...!

ஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்! (யூட்யூப் Flip ரகசியமும்:-)

ஷைலஜா, பினாத்தல்ஸ்னு நிறைய பேரு இன்னிக்கு ஏப்ரல் 1ம்தேதிக்காக‌ பதிவு போட்டுருக்காங்க. அவங்களைப் பாராட்டிட்டு, எப்பவும் போல நல்ல நாலு பாட்டு (சாருலதா அம்மிணி) பாக்கலாம்னு யூட்யூப்ல இன்னிக்கு 'Upside Down Show!'.

எல்லாம் தலைகீழ். அவங்க இந்த தலைகீழ் எஃபக்ட் மாத்தறதுக்கு முன்னே ரெண்டே ரெண்டு உங்களுக்காக எடுத்த ஸ்க்ரீன் காப்சர் (ரப்சரு!)


விஜயகாந்து படம் (வாழ்நாள்ல இதுவரை அவர் திரைப்படம் ஒண்ணு முழுக்க முடிய சத்தியமா பாத்ததில்லை) ஏதாச்சும் தலைகீழா பாத்து "ரசிக்கலாம்!"னு உங்களுக்கு தோணிச்சுனா, இத காப்பி/பேஸ்ட் செய்யுங்க‌: http://www.youtube.com/watch?v=9FFDKlHczqM&flip=1

யூட்யூப் விடியோவின் சுட்டி (எந்த சுட்டியானாலும்) அந்த "&flip=1" ஐ (without quotes) கடைசில சேத்தீங்கன்னா, ஐஸ்வர்யா ராய்கூட தலைகீழா ஆடலாம்.


ஜிமெயில் திறந்தா, "என்ன கொடுமை இது ஜிமெயில்?"
ரூம் இல்ல, பங்களாவே போட்டு யோசிச்சிருக்காய்ங்க.



குசும்பன் சாரை நட்சத்திரப் பதிவரா நாள் நட்சத்திரம் பாத்து தான்யா போட்டுருக்காங்க!

போக்குக் காட்டும் பிம்பங்கள்

என் முகமூடியை கவனமாக உடுத்தி,
நடையை கவனமாக
என் தோழரைப் போல்,
என் பேச்சும் சிரிப்பும் கூட
என் தோழர்களைப் போலவே.

"எவ்வளவு முற்போக்குக் கொண்டவர்கள்
என் தோழர்படை என்று
உங்களுக்குத் தெரியுமா?
எங்களைச் சாராததால் நீங்கள்
அனைவரும் பிற்போக்குவாதிகள்.
உங்களை எள்ளி நகையாடுவோம்!
உங்கள் அனைவரையும் வீழ்த்தும்
எங்கள் போராட்டம்.
எங்களைப் போல் உடுத்துங்கள்,
எங்களைப் போல் நடவுங்கள்!
எங்களில் ஒருவருக்கே
உங்களை ஆளும் மகுடம்".

கருத்துகளைப் பேசிப் பழகினேன்
என் வீட்டுக் கண்ணாடியில்.
சொல்லிக் கொண்டேன் என் பிம்பத்திடம்
'நான் எல்லோரையும் முன்னேற்ற வந்திருக்கிறேன்'.

காதல் என்பது...

கல்லூரி விடுதியில், தோழிகள் எல்லாரும் "ஏய், வரியா இல்லியா? லேட் பண்ணாத" என்று மிரட்டிட்டிருந்தாங்க. டேஸ்காலர் ஆக நான் தினம் கல்லூரி போனாலும், அம்மாவிடம் இது ஃபைனல் இயர், நேர்முகத் தேர்வு இருப்பதால் நான் மஹாவுடைய அறையில் ரெண்டு நாள் தங்கப் போகிறேன்னு சொல்லியிருந்தேன். இன்றைக்கு வீட்டுக்கு வருவேன்னும் சொல்லியிருந்தேன். தோழிங்க எல்லாரும் இன்றைக்கு மலைக்கோட்டை போகலாம்னு திடீர் ப்ளான். தஞ்சையில் பொறண்டு வளர்ந்தவள், எனக்குத் தெரியாத மலைக்கோட்டையா? ஆனால், இந்த பொண்ணுங்க(& பசங்க)ளோட கொஞ்ச நாள் தானே, கடைசி வருடம், எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலைக்குப் போகப் போகிறோம்!

உஷாராணி, "ட்ரஸ் இல்லியேன்னு கவலைப்படாதே! உனக்குப் பிடிச்ச என்னோட ஸ்கர்ட் தரேன், போட்டுக்கோ! மஹாவோட ஷர்ட் டாப் மாட்ச் ஆகும்... வாடியம்மா!" இது எல்லாரும் சென்னைப் பெண்கள். இப்போதைக்கு மலைக்கோட்டைக்கு இவர்கள் எல்லாரும் திரும்பி வரப் போவதில்லை என்று அறிந்து அங்கே "தேவ" தரிசனம் பார்க்க வரும் பசங்களை ஒரு வழியாக்கிவிட்டுத் திரும்புவார்கள் - பாவம், அந்தப் பையன்கள் இரண்டு வாரத்துக்கு சாப்பிட, தூங்க‌ப் போவதில்லை. ஒருமுறை பிரஹதீஸ்வரர் கோவிலில் அப்படித்தான் இவர்கள் அடித்த கூத்து... நான் அதுக்கப்புறம் ஒரு வருஷம் அந்தப் பக்கமே போகவில்லை.

மஹா, "ஹே ட்ரீமர்! இது ஃபைனல் பார்ட்டி! வி ஆர் செலிப்ரேடிங் அவர் ஜாப்ஸ் டூ! கௌதமும் வரான். தெரியும்ல?" என்றாள். கௌதம் என் மனதுக்கினியவன். என்றாவது ஒரு நாள் என் கண்களால் என் கனவுகளை அவனிடம் சொல்லிவிட வேண்டும்.. எண்ணங்களை நானே கலைத்து, "நாந்தான் வரேன்னு சொல்றேனில்ல, எங்கம்மாவுக்கு ஃபோன் சொல்லிட்டு வரேன்" என்றேன். மஹா, "சொன்னேன்ல, அவ வருவான்னு. தம் தம் த தம் த கௌதம்!" என்று பாடினாள். கனவுகளும் வெட்கமுமாய் அங்கிருந்து கலைந்து போனேன்.

அம்மா தம்புமாமா வீட்டில் சமையல் செய்பவர்; தம்புமாமாக்கு ஃபோன் செய்து அம்மாவைக் கூப்பிடச் சொன்னால், மாமா ஆயிரம் சாக்கு சொல்வார்; "படிப்பு எல்லாம் ஒம் பொண்ணு தானே பாத்துக்கறது, புருஷனையும் தேடிடுவாள், பாரு" அதில் தேடிடுவாள் சப்தம் வேறு மாதிரி சொல்வார். அம்மாவிடம் சொன்னால், "ஏண்டி, உன்னையும் ராஜுவையும் படிக்க வச்சதே இந்த சம்பளம் தானே! நீயும் ராஜுவும் வேலைக்குப் போக ஆரமிச்சா, நான் வேலைய விட்டு நின்னுக்கறேன்" என்று விடுவாள். அப்பா வைதிகம் செய்தவர், நான் பிறந்த இரு வருடங்களில் போய் விட்டார். அவர் ஃபோட்டோ தவிர வேறு நினைவுகள் இல்லை.

தம்பு மாமா வீட்டுக்கு ஃபோன் செய்தேன். முக்கியமாய் அம்மாவிடம் சொல்ல வேண்டியது - எனக்கு டிசிஎஸ்ல வேலை கிடைத்து விட்டது என்பது. ஃபோன் செய்தால், தம்புமாமா நான் யாரோடாவது ஊர் சுற்றுகிறேனா, வேலை தேடுகிறேனா, எனக்கு வேலை கிடைத்தால் அம்மா சமையல் வேலைவிட்டு நின்று விடுவாளா என்றெல்லாம் கேட்டு விட்டு, "உங்கண்ணா ராஜு பாங்க் பரிட்சை எழுதினானாமே, அதுல வேலை கிடைச்சுடுத்து, அதான் கோயிலுக்குப் போயிட்டு வரேன்னு போனா.. நீ ஃபோன் பண்ணினா சொல்லச் சொன்னா". மாமாவிடம் எனக்கும் வேலை கிடைத்து விட்டது என்று சொல்லி அவர் நெஞ்செரிச்சலைக் கிளப்ப‌ வேண்டாமேன்னு (அப்புறம் அம்மா தானே பத்தியச் சமையல் வேறு செய்யணும்) சொல்லவில்லை. "சரி மாமா, நானும் கோயிலுக்குத் தான் கிளம்பிட்டிருக்கேன். அங்க பாத்துக்கறேன்" என்று எதையோ சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.

வல்லத்திலிருந்து திருச்சி பஸ்ஸை கண்டக்டர் (எல்லா டிரைவர், கண்டக்டர் பேரும் எங்களுக்குத் தான் தெரியுமே!) பேரைச் சொல்லி நிறுத்தி ஏறிக் கொண்டோம். என்னிடமிருந்து ஓரடி தள்ளி என்னப் பார்த்தவாறே கௌதம். கௌதம் ரகசியமாக "யூ லுக் க்யூட்" என்றான். நான் சங்கடமாக மஹாவை நோட்டமிட்டேன். அவள் மெட்ராஸ் பெண்ணாய் லாகவமாய் ஒரு கண்ணடித்துத் திரும்பிக் கொண்டாள். "மஹா சொன்னாள்" என்று சொன்னான். ஐயோ, இந்த ஓட்டை பஸ்ஸில் தானா இந்த காதல் காவியம் தொடங்க வேண்டும்!! பஸ் லைசன்ஸ் ப்ளேட் நோட் கூடச் செய்யவில்லியேன்னு (கெக்கே பிக்கேவாகத்) தோன்றியது. கௌதம் சிற்சில தமிழ்ப்பத்திரிகைகளில் எழுதத் தொடங்கியிருந்தான். ஒரு கவிதைப் போட்டியில் அவன் மூன்றாம் பரிசும், நான் முதல் பரிசும் வாங்க என் ஒருதலைக் காதல் தொடங்கியது (மூணாவது பரிசு வாங்கறவங்களை யாராவது காதலிச்சுத் தானே ஆகணும்? அதே மாதிரி, முதல் பரிசு வாங்கற பொண்ணுக்குக் காதல் தப்பா?). கௌதம் மத்தியதரக் குடும்பம், அவன் அப்பா அரசாங்க குமாஸ்தா என்று மஹா துப்பறிந்து வந்து சொல்லியிருந்தாள்.

"பிள்ளையாரே, நான் சமத்துப் பொண்ணு. இந்த பசங்க தான் கலாட்டா பண்ண வராங்க. அவங்களைக் கண்டுக்காம, என் காதலை நிறைவேத்திடு. அட்வான்ஸா மலைக்கோட்டை ஏறிடுறேன்" என்று மனமார பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன். "நீ திருக்குறள்லாம் படிப்பியாமே" என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது. மெயின்கார்டில் இறங்கி, நண்பர்கள் ஆளாளுக்கு "ஐஸ்க்ரீம்", "இல்ல, கோயில் போயிட்டு அப்புறம்", "நான் இன்னிக்குக் கோயில் வரமுடியாது", "ஏண்டி அப்பவே சொல்லலை?" எல்லாம் நடந்து கொண்டிருந்தபோது.... ரோட்டுக்கு அந்தப் பக்கம் விந்தி விந்தி ராஜுவும், கூடவே அம்மாவும்.

அம்மா பெரியதாய் விபூதி இட்டிருந்தாள். நான் கௌதம் பக்கத்திலிருந்து மெதுவாகக் கழண்டு, ரோட்டில் ஓடி "ராஜு கங்க்ராசுலேஷன்ஸ்டா" என்று கத்திவிட்டேன். படிப்பு, போட்டி, பரிசுன்னு எல்லாத்திலியும் நான் பேர் வாங்க, ராஜு எதிலும் சோபிக்காமல் இருந்தான்; பி.காம் மாலை நேரக் கல்லூரியில் படித்தான். அதைத் தவிர தையல் கடை, கோவில் என்று பகுதிநேர ஊழியமும். ராஜுவுக்குச் சிறுவயதில் போலியோவால் ஒரு கால் சூம்பியிருந்தது வேறு. இந்த வேலை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி தானே. அம்மா, விபூதித் தீற்றலைவிடப் பெரியதாய்ச் சிரித்து, என்னிடம் "பாத்துடி" என்றாள்.

தம்புமாமாவோடு ஃபோனில் பேசியதையும், பேசாததையும் என்று ராஜுவின் வேலை, என் வேலை பற்றி நான் சொல்லச் சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு கொள்ளவில்லை - "நாங்க மலைக்கோட்டை அடிப்பிள்ளையாரைப் பாத்துட்டு, லட்சுமி சித்தியையும் பாக்கப் போறோம்னு தானேடி சொல்லிட்டு வந்தேன், ஆனாலும் தம்புமாமாவுக்குக் குசும்பு" - என்றாள். அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. திரும்பி ராஜுவின் முகத்தைப் பார்த்ததும், "என்னை தலையெடுக்க வச்சுட்டான்டி எம்பிள்ளை. நாளைக்கு நீயாவது யாரயாணும் கல்யாணம் பண்ணிட்டு எங்களை விட்டுப் போயிடுவே" என்று சிரித்தாள். நானும் "இன்னிக்கு ரொம்ப நல்ல நாள்மா", என்றேன். அதற்குள் கௌதம் ரோடை க்ராஸ் செய்து வந்தான். "நமஸ்காரம் மாமி" என்று அம்மாவிடமும், ராஜுவிடம் "ஹலோ" என்று பேசினான்.

மற்ற தோழிகளும் தோழர்களும் அங்கிருந்து கையாட்ட, அம்மாவும் இங்கிருந்தே கையாட்டினாள். இதுவரை நான் ஆண் தோழர்களை வீட்டுக்கு அழைத்து வந்ததில்லை, 10அடிக்கு 10அடி குடிலில் எப்படி அழைத்து வருவது? கௌதமிடம் அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி, "நீங்கள்லாம் கோயில் போயிட்டு வாங்கோ, நாங்க கிளம்பறோம்" என்று ஊருக்குக் கிளம்பினாள். மலைக்கோட்டைக் கோயில் போகும் நண்பர்கள் முன்னே நடக்க, நானும் கௌதமும் நண்பர்களின் பின்னால். கௌதம் என்னிடம் "உங்க அம்மா ரொம்ப சிம்பிள்" என்றான். ஓரம் நைந்த புடைவை சிம்பிள் அல்ல, இருப்பது அவ்வளவே. ராஜுவின் ஷர்ட், பான்ட் தம்பு மாமாவுடையது. நான் நிதானித்து, என் குடும்பக் கதையைச் சொன்னேன். "கஷ்டம் தான்" என்ற கௌதம் மற்ற நண்பர்களோடு சேர்ந்து கொண்டான். மலைக்கோட்டை அடி வரை கூட எங்கள் காதல் பயணிக்கவில்லை.

பி.கு.: பின்னொரு நாள் "வானில் பயணிக்க நினைத்தாலும் என் பாதங்கள் மண்ணில்"னு என்னோட ஆட்டோகிராஃப் நோட்டில் கௌதம் எழுதினான்:-) கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:‍-)

சங்கமம் கல்லூரி போட்டியில் இதுவும் சங்கமம்.

புத்தக விமர்சனம் - பெநசீர் புட்டோ: சமரசம் (இஸ்லாமும் மக்களாட்சியும் மேற்கும்)


உண்மையில, நான் பெர்ஸிபோலிஸ்-2 - என் புத்தக விமர்சனச் சுட்டி படிக்கும் முன்னால் இந்த புத்தகத்தைத் தான் படிக்கத் தொடங்கினேன் (இந்த புத்தகத்தில இருந்த ‘காதுல பூ’ / முடியலைன்னு பெர்ஸிபோலிஸ் படிக்க ஆரமிச்சேன்). பெநசிர் புட்டோவின் இந்த புத்தகம் இஸ்லாமிய மதச் சட்டங்களின் படி, மக்களாட்சி முறை சரியானதா, பெண்களுக்கு சம உரிமை உண்டா (கவனிங்க: பெண்ணியம் அல்ல!) போன்ற புதிய சமுதாயங்களின் கேள்விகளுக்கான விடைகளை புனிதக் குரான், ஹதீத் சொற்றொடர்களிலிருந்து புரிதல்களுடன் ஆரம்பிக்கிறது. மேற்படி சொற்றொடர்களை வேறு விதங்களில் புரிதல் இஸ்லாமிய வழக்கத்துக்கு எதிரானதா இல்லியா என்பது அவரவர் சொந்த விஷயம் என்று அதை டீல்ல விட்டுடறேன் (இந்த எண்ணம் தோணும் வரை என்னால் புத்தகத்தை ஆழ்ந்து படிக்க முடியவில்லை). புட்டோ இறப்பதற்கு முன் எழுதி, இறந்த பின் வெளிவந்த புத்தகம் என்பதையும் கவனிக்க.

புட்டோவின் அரசியல் பின்புலம், எழுத்துத் திறமை எல்லாம் தெரிந்த விஷயம். இந்த புத்தகத்தின் ஆடியன்ஸ் (எழுதினவர் பார்வையில்) மேலை நாடுகள் தாம்; எடுத்துக்காட்டாக, "மற்ற பெரும் மதங்கள் மாற்று-மதத்தினரை நடத்துவதற்கு நேர்மாறாக, முஸ்லிம்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் ‘வேத மறையினர்’ என்றே கருதுகின்றனர். எனவே ஓஸாமா பின் லாடென் உள்ளிட்ட உலகளாவிய முஸ்லிம் தீவிரவாதிகள் இஸ்லாத்தைப் பற்றிய தம் முழு அறியாமையையே காட்டுகின்றனர்” என்று கூறுகிறார்;-) [பக். 37] இன்னும் சொல்கிறார்: “இஸ்லாத்தைப் பொறுத்த வரை, ஒரே-இறைத் தத்துவம் கொண்ட மதங்கள் எல்லாமே மோட்சத்தை நோக்கியே செல்கின்றன. இஸ்லாத்தில், முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஒரே-இறைத் தத்துவத்தை நம்புவோர் அனைவருமே அவரவர் பூவுலகில் கொண்ட நடத்தை கொண்டே கடவுளால் கணிக்கப்படுவர், அம்மனிதர்களின் மதங்களால் அல்ல”. (கொலம்பஸ், கொலம்பஸ், எனக்கும் - இன்னும் கோடானு கோடியினருக்கும் - விட்டாச்சு லீவு!)

அவங்க புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடந்த புரட்சி/மக்களாட்சி/மறுமலர்ச்சி பற்றி உலக வரலாற்றுப் பாடங்கள் படிக்கிறாங்க. அவங்க [பக். 84/85] இரண்டு பக்கங்களில் எழுதியதை புள்ளிகளில் குறுக்கிச் சொல்கிறேன்: "இஸ்லாமிய உலகில், பலகாலங்களாய் வாழும் மக்களாட்சிகள் உண்டு. இதற்கு புனிதக் குரானின் சொற்கள் பொறுப்பல்ல! ... இதற்கு இரண்டு காரணங்கள்: இஸ்லாத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குள் மறைஞானத்தை ஒட்டி நிகழும் யுத்தம்; மேலை நாடுகளின் காலனீய ஆதிக்கம் - இவையே! ... முஸ்லிம் மன்னராட்சி என்பது நியாயமான மதச்சார்பற்ற அரசின் வழிகளை மக்களுடன் கலந்தாலோசனை செய்யும் அல்-குரானின் வழிகளோடு இணைக்கிறது...இஸ்லாமிய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தைக் குறித்து அமெரிக்கா செய்திருக்கும் ஆராய்ச்சி முஸ்லிம் வழக்கங்களை அறியாமல் செய்யப்பட்ட ஆராய்ச்சியாகும் - எனவே முஸ்லிம் நாடுகளில் சுதந்திரம் இல்லை என்பது பிழை! ” எனவே சரியான அரசியல் ஒப்புநோக்கு செய்யிறேன்னுட்டு, இஸ்லாமிய நாடுகள் பற்றின வரலாற்றுப் பாடங்கள் (அமெரிக்க இடதுசாரி ஒப்புக் கொள்ளும் வகையில்!) படிக்கிறாங்க! பல எடுத்துக்காட்டுக்களும் அமெரிக்க நாட்டினருக்குப் புரியும் வகையில் இருக்கு: “சுதந்திரம் என்பது இந்தோனேஷியாவில் இருப்பவருக்கும் லூயிசியானாவில் இருப்பவருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும்”. இந்தோனேஷியா மக்கள் தொகையில் உலகளவில் நான்காவது பெரிய நாடு - 230மிலியன்; லூயிசியானா, அமெரிக்க தென் மாநிலம், 5மிலியன் மக்கள் தொகை!

இந்த புத்தகத்தில் இஸ்லாமிய நாடுகளில் நடக்கிற / நடந்த அரசாட்சி முறைகள், புரட்சி எல்லாவற்றுக்கும் ஒரு (மேலை நாட்டு) அரசியல் சார்ந்த மழுப்பல் இருக்கு. பின் அட்டை முழுக்க, புத்தகத்தைப் பாராட்டி அமெரிக்க (ஜனநாயகக் கட்சி) அரசியல் பிரபலங்கள் எழுதியிருக்காங்க. இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ள குறிப்பிடப்படும் நாடுகள் தயாரில்லை என்பது ஊறுகாய்க் காரம் மாதிரி (தெரிஞ்ச விஷயம்). பெநசிர் புட்டோ இறக்குமுன் எழுதிமுடித்த, மேலை ஆதரவோடு அரசியலில் மீண்டு வர முயற்சி செய்யும் போது எழுதியது என்பது தான் இந்த புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணி, வேறு விஷயம் ஏதுமில்லை - எ.தா.க! இந்த புத்தகத்தைப் படித்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம்னு நேரங்கடந்து அறிந்து கொண்டேன்.

மொத்தத்தில், பெர்ஸிபோலிஸ்/சமரசம் - இரண்டு புத்தகங்களுமே இஸ்லாமியப் புரட்சிக்குடும்பங்களில் பிறந்த, அரசியல் மாற்றங்களை எதிர்பார்த்த, இரண்டு வித்தியாசமான பெண்கள் எழுதினது. 1969இல் பிறந்த அரசியல்/கட்சி எதிர்காலம் கருதாத, மனம்போன போக்கில் வாழும் மர்ஃஜானே சாட்ராபி பர்தாவின் மேலான வெறுப்பை வெளிப்படையாகவே சொன்னார்; 1953இல் பிறந்து அரசியல்/கட்சி எதிர்காலத்தையே கருத்தில் கொண்ட பெநசிர் புட்டோவின் கைகள் எப்பவுமே புகைப்படம் எடுக்குமுன் ஹிஜாப்பை சரி செய்யும். புத்தகங்கள் அவரவர் வாழ்வியல் நேர்மையைக் காட்டுகின்றன.

புத்தக அட்டைப்படம், விமர்சனம் இன்னும் இணையத்தில்.