உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்

உடை மாற்றி நிமிர்ந்த போது தான் கவனித்தேன், கண்ணாடியில் என் பின்னால் ஒருவன். அவனை யாரென்று தெரியாது . நான் கத்த வாய் திறந்தால் சத்தமே வரவில்லை. நான் அசையும் திசையெல்லாம் அவன் கண்கள் என்னையே பார்த்தன. அவன் முகத்தில் கண்களில் அது என்ன? கோபமா, வருத்தமா? அவன் கண்களில் ஆழம் அதிகமாயிருந்தது. அவன் ஆடை வினோதமாக இருந்தது. வெளிர்நீல நிறத்தில், அந்தக் கால ராஜாக்களின் உடை போல் உடுத்தியிருந்தாலும், பல இடங்களிலும் கிழிந்து தொங்கிக் கொண்டு இருந்தது, அவன் அதை லட்சியமே செய்யவில்லை....

பயத்தில் என் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது இன்னும். "சுமா" என்று ராஜாமணியின் குரல் கேட்டு தலை திருப்பினேன், அந்த வினாடியில் அந்த நீல ராஜகுமாரன் காணாமல் போனான். ராஜாமணி குளியலறை வாசலில் நின்று, "நான் ஆஃபீஸ் கிளம்பிட்டேன், நீ கிளம்பலையா? ம், சாயந்திரம் சேகர் வீட்டுக்கு போறோமா?" என்று இரைந்து கேட்டான். என் ராஜாமணியின் அலுவலகமும் என்னுடையதும் ஒவ்வொரு திசையில். குளியலறைக் கண்ணாடியில் நான் திரும்பிப் பார்த்தபோது யாரும் இல்லை, நடுங்கிக் கொண்டிருந்த நான் "ம்" என்று சொல்லிக் கொண்டிருந்த போதே, ராஜாமணி, "சரி, எனக்கு லேட்டாச்சு, பை!" என்றதும் அபார்ட்மென்ட் கதவை அறைந்து சாத்தியதும் கேட்டது.

நடுங்கிக் கொண்டே எனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே, கிளம்பினேன். செல்பேசியை எடுத்து ராஜாமணியை கூப்பிட்டால், செல்பேசி கர்கர் என்று சத்தம் போட்டது. கைப்பையை எடுத்துக் கொண்டு காருக்கு ஓடினேன். எப்பவும் என்னைப் பார்த்தால் பேசும் கீழ் அபார்ட்மென்ட் ஜான், "ஹேய், ஆர் யூ இன் அ ஹர்ரி?" என்றான். "யப், ஸீ யூ லேடர்" என்றவாறே, காருக்குள் அமர்ந்தேன்.

எனக்கும் ராஜாமணிக்கும் இந்தியாவில் திருமணம் ஆகி இரண்டு வாரங்களே ஆகி இருந்தன. ந்யூயார்க்கில் பல முறை வந்து பணியில் இருந்தமையால், என் வீட்டினர் அமெரிக்க மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்த போது எனக்கு நிம்மதி ஆகவே இருந்தது. இந்தியாவில் என்றால், சும்மா விட்டு விட மாட்டார்கள். 'தலைமுடி இப்படி வளத்துக்கோ,  இதை ஏன் சாப்பிடறே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொன்று விடுவார்கள்.

ஆனால் என்ன, ந்யூயார்க்கில் என் அத்தையின் ந்யூஜெர்ஸி வீட்டில் இருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஏற்கனவே ட்ரைவிங் நன்றாகப் பழகியிருந்தாலும், புதுமண வாழ்க்கை என்பது, உறவினர்கள் இல்லாமல், புதிய ஆணோடு குடும்பம் நடத்துவது என்பது - புதிய அனுபவம் தான். "எப்பிட்ரீ இவ்ளோ ஜோக் அடிச்சிட்டு ஸ்பங்கி மங்கியா இருக்கே" என்று கொஞ்சும் கணவன்...! ராஜாமணி யோசித்துப் பேசுபவன், நான் அப்படி இல்லை. ராஜாமணிக்குக் கோபம் வந்தாற் போலவே தெரியவில்லை. ஆனாலும், இந்தியாவில் என் பெற்றோரை ஃபோனில் கூப்பிடும் போதெல்லாம், ராஜாமணி கூடவே இருந்ததால் என் பெற்றோரிடம் தனியாகப் பேசவே வாய்ப்பு கிடைக்கவில்லை.

காரை ரிவர்ஸ் செய்ய கண்ணாடியில் பார்த்த போது தான், ரேயர் வ்யூ மிரர் இல், திரும்பவும் காலையில் வந்த‌ நீல ராஜகுமாரன். நீலப் பல்லைக் காட்டிச் சிரித்தான். ஏதோ சொன்னான். "என்னோடு பேச மாட்டியா" என்று தான் சொன்னான் என்று நினைக்கிறேன், அவன் பேசும் போது தான் அவன் மூச்சு கர்கர் - செல்பேசியில் கேட்ட அதே கர்கர் - என்று கேட்டது. அவன் எந்த மொழியில் பேசினான் என்று நினைவில்லை. தமிழ் போல இருந்தது. சடாரென்று ப்ரேக் போட்டேன். கார் டயர் விர்ரென்றதும் புகை பறந்ததும் தெரிந்த போது, செல்ஃபோன் அடித்தது, ராஜாமணியின் நம்பர். டாக் பட்டனை ப்ரஸ் செய்து, ஸ்பீக்கரில் போட்டேன். ராஜாமணி "ஹாய் ஸ்லீப்பி ஹெட்" என்றதும், பின்னாலிருந்தவன் காணாமல் போனான்.

"கீப் டாகிங்" என்றவாறே காரை ரிவர்ஸ் எடுத்து ட்ரைவினேன். "ஐ, என் குரல் அவ்வளோ இனிக்கிறதா?" என்றான் ராஜாமணி.

"எனக்கு பயமா இருக்கு ராஜ்" காரை ஓட்டியவாறே பேசினேன். குறிப்பாக ரெயர் வ்யூ மிரர் பார்க்காமல் இருக்க தவித்து விட்டேன்.

"என்ன பயம்?" என்றான் ராஜாமணி.

"என்னவோ தெரியல. காலையிலிருந்து அமானுஷ்யமா ஏதோ ஒரு உருவம் பாக்கிறேன். என்னன்னு சொல்லத் தெரியல. பயமா இருக்கு", என்றேன் நான்.

"என்னம்மா சொல்ற? ஸிக் லீவ் போட்டுட்டு வீட்டுக்குப் போ. நானும் வரேன்" - இது ராஜாமணி.

"இல்லப்பா, எனக்குத் திரும்பிப் போக பயமா இருக்கு. அதுவும் புது ப்ராஜக்ட்ங்கிறதால், டக்னு இதுக்கெல்லாம் லீவு போட வேணாம்னு பாக்கிறேன்.... ம், ஜான் யங் நினைவிருக்கா?"

"யாரது புது காதலன்?"

"அட, சீ. கீழ் வீட்டு பார்ட்டி. வெள்ளைக்கார தாத்தா. இந்த அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் பத்தி பயங்கரக் கதை சொன்னாரு நேத்திக்கு... பேய் கீய்னு.." - இது நான்.

"ஆமா, இதெல்லாம் கேட்டு நடுங்கு. கிறுக்குடி நீ! சரி, நீ எதுனாலும் எனக்கு ஃபோன் பண்ணு... ஏன் முன்னாலியே ஃபோன் செஞ்சிருக்கலாம்ல?"

செல்பேசி காலையில் தொந்தரவு செய்தது பற்றி ஏதாவது சொன்னால் நம்ப மாட்டான் என்று தோன்றியது. "சரி, எதுனாலும் டெக்ஸ்ட் பண்றேன்", என்றேன். திடீரென் ஒரு யோசனை தோன்றியது, "ஹனி, ஒரு உதவி பண்ணேன்" என்றேன்.

"என்னடி?" டி போட்டால், தலைவர் மசிந்து வழிக்கு வருகிறார் என்று தெரியும்.
"ம், நேத்திக்கு ஒரு கவிதை எழுதினியே என்னைப் பத்தி, அது சொல்லேன்", என்றேன். செல்பேசியின் ரெகார்டரைத் தொடங்கிக் கொண்டேன்.

******************************************************************************************************************************************************************************

அன்று மாலையும் மறு நாள் காலையும் நான் தனித்திருந்த போதெல்லாம் அந்த அழுக்கன், பேயோ என்னவோ, என்னைத் தொடர்ந்தது. மறுநாள் சனிக்கிழமை என்பதால், ராஜாமணியை, காலை10 மணிவாக்கில் "ப்ரஞ்ச்" மாதிரி வெளியே சாப்பிடுவோம் என்று கிளப்பினேன். நடப்பதை எல்லாம் விவரித்தேன்.

ராஜாமணி பயந்து போயிருந்தது அவன் அழகிய கண்களில் தெரிந்தது. எப்பவும் போல், என்ன செய்யலாம் என்ற யோசனையைத் தொடங்கினான். "சுமா, என்னடா சொல்றே? இன்னிக்கு ஹோட்டல் போயிடுவோமா? ஏதாச்சும் டாக்டர் கிட்ட போகணும்னா எமர்ஜன்ஸிக்கு தானே கூட்டிட்டுப் போக முடியும்? இன்னிக்கு சனிக்கிழமை வேற. எனக்குத் தெரிஞ்ச டாக்டர் யாரும் ஆஃபீஸ் திறந்திருக்க மாட்டாங்களே.... உனக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்க ஆஃபீஸ்ல தொடங்கிட்டாங்களா? எனக்கு ஹெச்1 விசா கொடுத்த கம்பெனியில் உனக்கு ஹெல்த் அப்ளை பண்ணியிருக்கேன், ஹெச். ஆர். பிடுங்கி இன்னும் ப்ராசஸ் பண்ணலை...." அவன் பயம், நிதர்சனங்களின் பயம் ஆக இருந்தது.

எனக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது. ராஜாமணி, "இரு ரிலையன்ஸ் கார்டு நம்பர் வச்சிருக்கியா, எங்க அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கேக்கிறேன், ரமணி அத்தை மகன் ஃப்ளோரிடாவில டாக்டரா இருக்கான், அவனை வேண்ணா கூப்பிட்டு கேக்கலாம். அவன் நம்பர் இல்ல... அப்பாவுக்கு தெரியுமோ என்னவோ?"

என் கைப்பையை எடுத்து, ரிலையன்ஸ் நம்பரை எழுதிய ஸ்டிக்கிநோட்டை எடுத்தேன். நிமிர்ந்தால், எதிரில் நீல ராஜகுமாரன். திரும்பவும். ராஜாமணி பக்கத்தில் இருந்த போதும். ராஜாமணி பேசிக்கொண்டிருந்த போதும். என்மேலிருந்த கண் வாங்காமல்.

ராஜாமணி, ஃபோனை மூடியவாறே, "அப்பா எங்கியோ வெளியில போயிருக்காரு போல" என்று என்னைத் திரும்பிப் பார்த்தவன் கண்களில் பயங்கரம் தெரிந்தது. "சுமா, உன் கண் நிலைகுத்துதடி, என்னடி ஆச்சு?"

******************************************************************************************************************************************************************************

நான் கண் திறந்த் போது எமர்ஜென்ஸி அறையில் இருந்தேன். இன்ஷூரன்ஸ் இல்லாமல் எமர்ஜென்ஸி கூட்டி வந்ததற்காக தீட்டப் போகிறார்கள். வெளியே, ராஜாமணி ஃபோனில் கதறுவது தெரிந்தது. அந்த அழுக்கு, நீல ராஜகுமாரப் பேய் டாக்டருக்குப் பின்னால் சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். நான் புன்னகைத்துக் கொண்டேன். புன்னகைத்த அந்த நிமிடத்தில், பெரும் அமைதி என்னிடம். அழுக்கன் என்னை நோக்கி வந்தான். 

வெளியே: ராஜாமணி மாமனாருடன் ஃபோனில், "சார்... மாமா, என்ன சொல்றீங்க? ஜான் யங்குங்கிற பேர்ல எங்க அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ்ல யாரும் இல்லன்னு சொல்றாரு அபார்ட்மென்ட் மானேஜர், சுமா தனக்குத் தானே பேசிட்டுப் போவா-னு வேற சொல்லிச் சிரிக்கிறாரு... என்னது? மருந்து கொண்டு வர மறந்துட்டாளா? ...... அவளுக்கு பைபோலார் டிஸ் ஆர்டர் வியாதி இருக்குன்னு சொல்லாம மறைச்சிட்டு.....". நச்!

கடிகாரத்தில் முகம் பார்த்து

சாயம் கலைந்திருக்கிறேன்.
என் கண் மை கலைந்து,
கைப்பையின் கண்ணாடிக்குள்
அடக்க முடியாத
மாற்றம்.

தெளித்துத் தரையில் விழுந்த‌
மழை நீராய்க் காணாமல்
போனது காலம்.

மேல் கிளையிலிருந்து விழுந்து
இனி காயப் போகும் சருகுக்கும்,
நேற்று வாங்கிய‌ பூவிலிருந்து
தரையில் உதிரும் மகரந்தத்துக்கும்
என்னைத் தெரிந்திருக்கும்.

குடித்துப் போட்ட பாட்டிலையும்
வெந்த கிழங்கின் தோலையும் போல்
என்னைப் பார்த்துச்
சிரித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.

வழுவல, கால வகை

நாலுகால் மண்டபம் வரப்போவுது. ஆனா, அப்பய்யா அதுக்குள்ளாற என் தோளைப் பிடிச்சு அமுக்குறாரு. அவரு கையில கோல் வச்சிட்டு இருப்பாரு. ஆனாலும் அப்பய்யாவுக்கு பயம் தான். என் தோளைப் பிடிச்சிட்டு தான் நடப்பாரு.

"அப்பய்யா, வலிக்குது, தோள விடுங்க".

"இல்லடி, வுழுந்துடுவேன்னு பயந்தான்". ஒரு நிமிசம் தோளை விட்டாலும், இந்த இளவெடுத்த மண்டபம் வரப்போ, அப்பய்யாவுக்கு கைகாலெல்லாம் ஒதறிடும், என் தோளைப் பிடிச்சிட்டு, கோலை இன்னொரு கையால இழுத்துகிட்டே நடக்குறாரு. அவருக்கு ஒரு காலு வெளங்காது, இழுத்து இழுத்து தான் நடப்பாரு. கூனு விழுந்து, காலு வெளங்காம, சவரஞ் செய்யாத முகம் தான் அப்பய்யாவுக்கு. என் ஸ்கூலு ஃப்ரண்ட்ஸ்க்கு எல்லாம் கிண்டல் தான். "உங்கப்பாரு இம்புட்டு சீக்காளியானப்புறம் ஏன் கல்யாண‌ம் கட்டிகிட்டாரு?"

நான் ஒரே பொண்ணு, மனசில பட்டத பட்பட்னு கேட்டுருவேன்னு அப்பய்யாவுக்கு ஒரே சந்தோசம் தான். அஞ்சு வயசில கைய பிடிச்சிட்டுப் ஊரெல்லாம் போவம்ல! எல்லாருட்டயும் வாயக் கொடுத்து வம்பு வளத்துவேன், எங்க அப்பய்யா சிரிச்சுக்குவாங்க. நேத்து கூட ஸ்கூல்ல என் டீச்சரு ஒருத்தங்க அவங்க புள்ளய விட நான் நல்லா மார்க் வாங்கிட்டேன்னு மனசுல வச்சிட்டு, பளார்னு அறைஞ்சிட்டாங்க. ஹெட்மாஸ்டர் ரூமுக்கு போயிட்டேன், இன்னும் அடி வாங்கிட்டு வந்தேன். அதப்பத்தி அப்பய்யா கிட்ட சொன்னதுக்கு, "மனசுல பட்டத கேக்குற ராசாத்தி, ஆனா, அக்குரமம் செய்யுறவங்க‌ கிட்ட‌ சாக்கிரதையா இரும்மா. ஒனக்குத் தெரியாதது இல்ல"ன்னுட்டே நடந்தாரு அப்பய்யா.

ஒரு கெழவி, ஊருக்குப் புதுசு போல, "ஏம்மா, அவரு பாவம் நடக்க முடியல, நீ பறக்கறயே, மெள்ள நட தாயி"ன்னுட்ட்டு போச்சு. அதுக்கு என்னா தெரியும்? அப்பய்யா தோளப் போட்டு அமுக்குறது!

மண்டபம் வந்திருச்சு. அப்பய்யா, "பாருடி, நான் கட்டின பூங்கா இது. காந்தி சிலை பாத்தியா? அதுல எம்புட்டு அளகா அவரைப் பத்தி கல்வெட்டுல எளுதி வச்சிருக்கேன். ஒரு நாள் இந்த இடத்துல பிள்ளங்க விளையாடணும், லைபரி கட்டணுமடி".

அதெல்லாஞ் சரி, இன்னிக்கு சாப்பாட்டுக்கு வழி இல்ல, லைபரி யாரு கட்டுவாங்க? அப்பய்யா சிறிசா எளங்காளையா இருக்கச்சொல்ல‌ கட்டினாராம்ல. பெரிய பூங்கா தான். எப்பனாச்சும் கூலி வேல செஞ்சு வயத்தக் கழுவிட்டு, வேற‌ காசு சேக்காம இருந்துட்டாரு அப்பய்யா. காலு வெளங்காமப் போகக்காட்டியும், எங்க அம்மாவ‌ எங்கிட்டிருந்தோ கூட்டிகிட்டு வந்திட்டாராம். எல்லாம் அப்பய்யாவுக்கு தம்பி மொற ஒரு சேக்காளி - நான் சித்தப்பான்னு கூப்பிடுவேன் - சொல்லித் தான் தெரியும். அம்மா ஒண்ணுஞ் சொல்லாது. சோத்துக்கு இல்லன்னுட்டு அப்பப்ப ஓரமா நின்னுட்டு அழுவும். தல தல யா அடிச்சிட்டு சத்தம் போடாம அழுவும், தனியா ஒக்காந்து தெலுங்கு பேசிட்டிருக்கும். பாவம். ஆனா, எங்கிட்ட‌ ஒண்ணுஞ் சொல்லாது.
***********************************************

அது கெடக்கு 20 வருச பழய கதை, கழுதை. அமெரிக்காவுல இருந்து ஊருக்கு வ்ந்திருக்கேன். அப்பய்யாவுக்கு கருமாதி. அப்பவும் கூட, என்னோட க்ராப் தலையும், மஞ்சளும் ப்ரவுனுமா டை அடிச்ச தலையும் பாத்துட்டு செல்வியோட ஆயா சிரிச்சு, "ஏன்டி, அப்பன் மொவம் பாக்க‌ வரலியேடி"ன்னுட்டு தான் என்னை வரவேத்தது.

என்னைய, கருமாதிக்கும் வராதேன்னு தானே அப்பய்யா உசிரோட இருக்கப்பவே சொன்னாங்க. ஏன் அப்பய்யா அப்படி சொன்னாங்கன்னு கேக்கறீங்களா? அப்பய்யா உசிரோட இருக்கச் சொல்ல‌, எனக்கு 14 வயசிருக்கும்; நான் அப்பய்யா கிட்ட‌ கேட்டது இது தான்: "உன் வெளங்காத காலுக்கு துணை வேணுமுனு தானே எங்க அம்மாவை கட்டிகிட்டே? என்னைப் பெத்துப் போடாம இருந்திருக்கலாமே? என்னை ஏன் பெத்தே?"

அம்மா கூட அன்னைக்கு ஒண்ணும் பேசலயே. பக்கத்து ஊட்டு செல்வி (அப்ப அது சின்னப் புள்ள), "ஏண்டி, இனும தாவணி போடணும்னு உங்கப்பா சொன்னதுக்கா இந்த கேள்வி கேட்ட?"ன்னு அப்புறமா ரகசியமா கேட்டுச்சு. இல்லியே! செல்விக்கு நான் சொன்னாலும் விளங்காது. நான் சைக்கிள் ஓட்டக்கூடாதுன்னு அப்பய்யா ஒத்தக்கால்ல (அவங்களுக்கு ஒத்தக் கால் தானே!) நின்னாங்க. அதுல வளந்த சண்டைல தான், நான் அப்படி கேட்டேன். ஏன் என்னைய சைக்கிள் ஓட்டக் கூடாதுன்னு அப்பய்யா சொன்னாருன்னு எனக்கு விளங்கிடுச்சி.

தாவணி போட்டாலும், ஸ்கூல்ல பஸ்ட்டு மார்க்கு வாங்கினாலும், எங்க குடும்பத்துல இல்லாத முறையா, 'அமெரிக்கா போவேன் அங்க‌ பான்ட் சட்டை தான் போடுவேன்'னு என் அம்மாகிட்ட ரகசியமா சொன்னாலும், நான் நான் தான். மனசுல பட்டத கேக்கத் தான் கேப்பேன். அப்ப வளந்த சண்டையில‌ சொன்னாரு அப்பய்யா, தன் கருமாதிக்கு வராதேன்னிட்டு.

ம், சொல்ல மறந்துட்டேனே, அப்பையா கையால கட்டின பூங்கா பக்கத்துல இருந்த‌ நாலுகால் மண்டபம் இடிஞ்சுடுச்சி, போன வருசம் அங்க நல்லா கட்டிடம் கட்டி கவர்ன்மென்டு லைப்ரரி தொடங்கியிருக்காங்க.... நான் தான் கலெக்டர் வரைக்கும் போய், தள்ள வேண்டியதைத் தள்ளியிருக்கேனே!

கருமாதி முடிஞ்சிடுச்சி. அம்மா ஒரு வருசம் இங்கயே இருந்துட்டு அப்பால அமெரிக்கா கிளம்பி வரேன்னிடுச்சு. இன்னிக்குக் காலையிலே, நான் முடி சீவிட்டிருந்தேன். அம்மா நைசா வந்து தன் தலையில டை அடிக்கட்டுமான்னுது.

மக்களே, ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!

இந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ (1). இது பத்தி ஞாநி ("ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க. இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம்? அரசியல்வாதிகளுக்குத் தான்! நீங்க ஞாநியுடைய ஒரிஜினல் வாதம் பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க?) என்று சொல்றாரு. ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க!!!

49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது "மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க
விருப்பமில்லை" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.(2). இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல!)

குண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க). 1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் "வோட்டுப்பட்டி ஞாநி" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி (3) 49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம். கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே?

49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது!) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா? பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில! தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது? தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் "ஆதரவாளர்கள்", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான்! எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்!!

உருப்படியா இரண்டு யோசனைகள் (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):
1. ஓட்டுப் போடுவது சில நாடுகளில் கட்டாயம் (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும். அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா? படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் (4). பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.

2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு). தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.

ஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு. ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும். அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தரவு/சுட்டிகள்:
1. இந்தியத்தேர்தல் விதிகள் இங்கே.
2. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.
3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: வித்யா, ஊர்சுற்றி, அருண்குமார்.
4. பத்ரி சார் பதிவிலே கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட!




மீள்பதிவு!

கைப்பை பற்றியதல்ல‌

அப்பவும் இப்பவும்
கண்மை வளர்க்கவும், அடையாளங்கள் தொடுக்கவும்,
என் கைப்பையில் பலவும் உண்டு.

காதல் தருணங்களில்,
அழகின் சின்னமான கைப்பை.
"என்ன ரகசியம் வச்சிருக்கே
இந்த கைப்பையில்?"

இன்றைக்கு
குழந்தைக்குப் பிடித்த தின்பண்டம் மட்டுமல்ல,
அவன் தின்று போட்ட இனிப்பும்
ஒட்டிக் கொண்டு....
"அம்மா பையில வச்சிடு"

நாளைக்கு, கைப்பையில்
அவருக்கும் எனக்குமாய்
மருந்தும் இருக்கலாம்;
கண்மை கைப்பையில் இருந்து
காணாமல் போகலாம்.

வெவ்வேறு நிறங்களில், விதங்களில்
கைப்பை மட்டும் வரும்
அப்பவும் இப்பவும்.

50வது பதிவு: பெண் பொறியியலாளர் / பதிவர்களின் பிரச்னைகள்

பெண் பதிவர்களுக்கு - கணிணி சார்ந்த பதிவர்களோ, இல்லை எதுவானாலும் - இந்த தொல்லை தாங்க. உலகம் முழுக்க!!!!

வெள்ளி காலை நான் படிக்கும் ஒரு கணிணி இதழில் வந்த கார்ட்டூன் இது. ஒரு பெண் பதிவர் ஒரு செய்தியைச் சொன்னால், அந்த செய்தியை விட அந்தம்மா "என்னா ஃபிகர்" என்று கவலைப்பட ஒரு கூட்டம் இருக்கு.... இருக்காம்!!!



இந்த மாதிரி இல்லாத உங்களைப் போன்ற‌ நல்ல பதிவர்களுக்கு மொழியாக்கம் தேவையில்லை என்பதால, தமிழ்ல கொடுக்கலை.

:-)

_/\_ நன்றி/Thanks To: http://www.xkcd.com/322/ _/\_

புரியாத பெண்கள் - 3

இந்த வாரம் ஒரு சில தோழிகளின் அனுபவ, மற்றும் கருத்துக்களின் கலவைத் தொகுப்பாக ஒரு கற்பனைப் படைப்பு.

புரியாத பெண்கள் - 1
புரியாத பெண்கள் - 2

எங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பெர்ட் (நாய்) 'ரின்டே'வை அதன் காலைக் கடன்களுக்காக நான் கூட்டிக் கொண்டு வெளியே சென்ற போது, பூஜா ஒரு வீட்டிலிருந்து எட்டிப் பார்த்து “ஹாய்” என்று தொடங்கியது எங்கள் அறிமுகம் ('ரின்டே'வை நான் நாய் என்று சொன்னது என் கணவர் ராஜாமணிக்கு தெரிந்தால், அவ்வளவு தான்:-).

பூஜாவுக்கு இரண்டு மகன்கள், 3வயசு & 5வயசில். என் குழந்தைகள் சிறிது பெரியவர்கள் என்றாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எங்க நட்பு கொஞ்சம் மெதுவா வளர்ந்தது.... என் பிள்ளை கண்ணன் அந்த பசங்களைப் பார்த்தாலே நிண்டெண்டோ விளையாட்டு சாமான்களை அவசரமாய் மறைத்து வைப்பான். பூஜாவின் குழந்தைகள் பேப்பரைக் கிழித்து சிறுசிறு துகள்களாய்ப் போடுவது, விளையாட்டுப் பொருட்களை உடைத்து வைப்பதுன்னு நிறைய சேதம் செய்து கொண்டிருந்தார்கள். பூஜா தன் பிள்ளைகளைக் கண்டிக்காமலும், சுத்தம் செய்யாமலும் கூட்டிக் கொண்டு போய் விடுவாள்.

பூஜாவின் கணவன் வேறு, அவ்வப்போ, “உங்க வீடு எங்க வீட்டை விடச் சின்னதோ?”, “உங்க வீட்டு பழைய ஓனர் சுருட்டு பிடிச்சிருப்பாரோ?”, “உங்க வீட்டு சோஃபா மாதிரியே எங்க கிட்ட இருந்தது, அசிங்கமாயிருக்குன்னு போன வருஷம் தான் தூக்கி எறிந்தோம்” என்றெல்லாம் ஊக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்:-)

பூஜா, "செயின்ட் லூயிஸ்" நகரத்துக்கு ஒரு வார இறுதிப் பயணம் போயிட்டு வரலாம்னு சொன்னதால‌, எல்லாருமா போனோம். ஊர்ச் சுற்றி விட்டு சனி இரவு அன்று, சாப்பிட்டு முடித்தபின் நாங்கள் - பூஜா, அவள் கணவர் சூர்யா, நான், ராஜாமணி - வாடகைக்கு எடுத்திருந்த டவுன்ஹவுஸில் வெட்டிப் பேச்சுக்காக அமர்ந்தோம். நாள் முழுக்க போட்ட ஆட்டத்தில், குழந்தைகள் எல்லாருமே தூங்கி விட்டிருந்தனர். அப்போது, கோடிக் கணக்கில் மதிப்புள்ள வீடுகள் அடையாறிலும் தஞ்சையிலும் தங்களுக்கு சொந்தம் என்று பூஜா சொன்னாள். எனக்கு அது புது நியூஸ்.

“கடவுள் நம்பிக்கை இருக்கா?” என்று பூஜாவின் கணவர் சூர்யா தொடங்கினார்.

“இல்லைன்னு சொல்ல மாட்டேன்... நம்மை மீறின சக்திக்கு, அது மக்களின் சக்தியாகவே இருக்கலாம், அதை கடவுள்னு சொல்லுவதில் தப்பு என்ன‌?” என்று சிரித்தேன் நான். மனிதர்களே கடவுள், அதுனால உருவ வழிபாட்டுல தப்பு இல்ல என்பது என் கட்சி. ராஜாமணி தீவிர அனுமான் பக்தர். பேசாமல் சிரித்த ராஜாமணியைப் பார்த்து நான் ஒரு புன்முறுவல் கொடுத்தேன்.

“கடவுள்னா யாரு? நம் உருவகம் தானே? மதம் மக்களைக் கட்டிப் போடத் தானே பிறந்தது?” இது பூஜா.

“கடவுள் நம்பிக்கை நமக்கு ஒத்து வந்தால் அதை பின்பற்றலாம் - மனுசங்க, மிருகங்களுக்கு தொல்லை இல்லாத பட்சத்தில்! கணக்கு, அறிவியல்னு எல்லாத்துக்கும் கட்டமைப்பு இருக்கறதுனால, மதம் இருப்பதில் தப்பு இல்லை - அது யாரையும் ஃபோர்ஸ் பண்ணக்கூடாது. எதுவானாலும் ஒரு உயிர் இன்னொரு உயிரை விடத் தாழ்வுன்னு சொல்லவே கூடாது” என்று நான் சொன்னேன்.

“திரௌபதிக்கு எத்தனை கணவர்கள்? க்ருஷ்ண அவதாரத்தில் எத்தனை மனைவிகள்? யப்பா! இதெல்லாம் சரியா?” என்றாள் பூஜா. இன்னும் மேலோட்டமாக நிறைய புராண கேள்விகள் சூர்யா கேட்டார். இப்ப யோசித்தால், இதே வரிகளைச் சொல்லித் தான் அவங்க எல்லாரிடமும் மார்க்கட்டிங் தொடங்கியிருப்பாங்கன்னு நல்லா புரியுது.

பேச்சு திசை மாற, மாற, ஒரு வழியாய், பூஜா விஷயத்துக்கு வந்தாள். ஒரு டம்ளர் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து , “ஸ்ரீஅப்பன் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று ராஜாமணிக்கு அருகில் அமர்ந்தாள்.

“உங்க வீட்டு கெட்-டுகேதர்ல ஸ்ரீஅப்பன் படம் பாத்திருக்கேன். அவரைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே” - இது ராஜாமணி. தமிழ் இணையத்தில் மூழ்கி முத்தெடுத்த எனக்கு ஸ்ரீஅப்பன் பற்றி நன்றாகவே தெரியும். பெயர் பெற்ற “குருஜி”. ஓரிரு கொலை வழக்கில் மாட்டினார், கொலை வழக்குகளும் மாண்டு போயின. இப்ப பக்தி மார்க்கம் பற்றி சிடிக்கள் நிறைய வெளியிடுகிறார், மார்க்கெட் போன பல இந்திய பிரபலங்களுக்கு அருள் பாலிக்கிறார், ஸ்ரீஅப்பன் விடியோக்களில் அவர் தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தானாய் உண்டாகிறது... இப்படி எனக்கு நிறையவே தெரியும், ராஜாமணிக்கு என்னை மாதிரி வம்பு தெரியாது:-)

ஸ்ரீஅப்பன் பற்றி, தலையைச் சாய்த்து கண்கள் படபடக்க தலைமுடியைச் சுருட்டிச் சுருட்டி, பூஜா சொன்னது அதிகம். அவர் பிறந்த அன்றே காக்கை கூவியது, மயில் அகவியது, ஆமை அலறியது. அவர் பள்ளிக்குப் போய் தனக்குப் பாடம் சொல்ல வந்த‌ வாத்தியாருக்கெல்லாம் பாடம் எடுத்தார். இறைவன் அவருடைய கண் முன்னே இரண்டு முறை வந்து ‘உலகை மாற்று’ என்று ஆணை இட்டார். முதல் முறை கேளாமல் இருந்தாலும், ஸ்ரீஅப்பன் இரண்டாம் முறை தம் ஆன்மிகப்பயணம் தொடங்கினார். ‘ஓஹோ அதுனால தான் அவரு ரெண்டு முறை கண்ணாலம் கட்டிகிட்டாரு’ என்று கேட்க நினைத்து, “அவர் கல்யாணம் ஆனவர்ல?” என்றேன் நான்.

திரும்பி என் கண்களைச் சந்தித்த பூஜா, “கல்யாணம் செய்யாத ரிஷிபுங்கவர்கள் கிட்ட பிள்ளைங்களைப் படிக்க யாரும் நம்பி அனுப்புவதில்லை. கல்யாணம் ஒரு சடங்கு தான் சுமா! நீ உன் பார்வையை மாத்திக்கணும்” என்றாள். எனக்கு பயமாய் இருந்தது. ஜூஸில் வேறு ஏதாவது கலந்திருக்குமோ?

நான் பலமுறை “வேண்டாம்” என்று சொல்லியும், பூஜாவும், சூர்யாவும் ராஜாமணியிடம் ஸ்ரீஅப்பனின் உலகளாவிய கோவில்களை வெப்சைட்டில் காட்டி, இரண்டு ஆன்மிக வகுப்புகளுக்கு பணம் வாங்கிக் கொண்டார்கள் - ஆயிரம் டாலர் அநாவசியச் செலவு:-( அடுத்த இந்திய பயணத்தின் போது அவர்களின் இந்திய மையங்களில் வந்து தங்கிப் போனால் $5,000இல் அமைதி கிட்டும் என்றும் சூர்யா சொன்னார். பின்னர், ராஜாமணி சிரித்தவாறே, “எதுக்கு போன ராமநவமிக்கு ராமர் படத்துக்கு சூடம் காட்டி, பானகம் நீர்மோர் செஞ்சீங்க?” என்றான்.

அதன்பின், வேறொரு நாள் என் சின்ன பிள்ளையின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த‌ பூஜா, அங்கு வந்திருந்த‌ எல்லாருக்கும் இந்த ஆன்மிக அனுபவங்களை விற்க முனைந்தாள். “இல்லம்மா, நான் இன்னொரு அநாதை ஆசிரமத்துக்கு மாதந்தோறும் கொடுக்கிறேன்” என்ற வெள்ளைத் தோழியிடம் பூஜா சொன்னது டாப்: “அந்த ஆசிரமத்து நம்பர் கொடுங்க. அவங்க எங்க டிக்கட்டுகளை விற்றால், உங்கள் ஆசிரமத்துக்கு ஒரு கட் கொடுக்கிறேன்”. ஸ்ரீஅப்பனின் 'ஸ்ரீமோட்சா' கூட்டத்தில் இந்த கமிஷன் அவரவர் சீனியாரிட்டி பொறுத்ததாம்.

நாங்க விலை கொடுத்த ஆன்மிகத்தை வாங்கிக் கொள்ள ஸ்ரீஅப்பன் ஆசிரமத்துக்குப் போகவே இல்லை. "ஸ்ரீஅப்பன் அமெரிக்கா வராரு, 6,000 டாலர் கொடுத்தீங்கன்னா, இரண்டு நாள் அவருடன் தங்கலாம், எல்லாருக்கும் சிடி கொடுப்பாரு"ன்னு ஒருமுறை பூஜா ஃபோன் செய்தப்போ, 'இனி என்னைக் கூப்பிடாதே'ன்னு சொல்லிட்டேன்.

'ஆம்வே' சுட்ட ஆம்லெட்டை கொத்து பரோட்டா ஸ்டைல்ல‌ சுடறாங்கப்பா...!

ஏப்ரல் 1ம் தேதி கலக்கல்ஸ்! (யூட்யூப் Flip ரகசியமும்:-)

ஷைலஜா, பினாத்தல்ஸ்னு நிறைய பேரு இன்னிக்கு ஏப்ரல் 1ம்தேதிக்காக‌ பதிவு போட்டுருக்காங்க. அவங்களைப் பாராட்டிட்டு, எப்பவும் போல நல்ல நாலு பாட்டு (சாருலதா அம்மிணி) பாக்கலாம்னு யூட்யூப்ல இன்னிக்கு 'Upside Down Show!'.

எல்லாம் தலைகீழ். அவங்க இந்த தலைகீழ் எஃபக்ட் மாத்தறதுக்கு முன்னே ரெண்டே ரெண்டு உங்களுக்காக எடுத்த ஸ்க்ரீன் காப்சர் (ரப்சரு!)


விஜயகாந்து படம் (வாழ்நாள்ல இதுவரை அவர் திரைப்படம் ஒண்ணு முழுக்க முடிய சத்தியமா பாத்ததில்லை) ஏதாச்சும் தலைகீழா பாத்து "ரசிக்கலாம்!"னு உங்களுக்கு தோணிச்சுனா, இத காப்பி/பேஸ்ட் செய்யுங்க‌: http://www.youtube.com/watch?v=9FFDKlHczqM&flip=1

யூட்யூப் விடியோவின் சுட்டி (எந்த சுட்டியானாலும்) அந்த "&flip=1" ஐ (without quotes) கடைசில சேத்தீங்கன்னா, ஐஸ்வர்யா ராய்கூட தலைகீழா ஆடலாம்.


ஜிமெயில் திறந்தா, "என்ன கொடுமை இது ஜிமெயில்?"
ரூம் இல்ல, பங்களாவே போட்டு யோசிச்சிருக்காய்ங்க.



குசும்பன் சாரை நட்சத்திரப் பதிவரா நாள் நட்சத்திரம் பாத்து தான்யா போட்டுருக்காங்க!